
தெற்கு உள் கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் வரும் 20ஆம் தேதி வரை பலத்த காற்றுடன் கனமழை தொடர வாய்ப்புள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இன்று (செப். 15) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதர தமிழ்நாடு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
காற்றுக்கு எச்சரிக்கை
செப்டம்பர் 15ஆம் தேதி தெற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை நிலவரம்
உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.