ஃபோர்டு இந்தியா அடித்த சிக்சர்.. சென்னையில் பிரம்மாண்டமான மின்சார வாகன ஆலையைத் திட்டம் | A ‘Sixer’ by Ford India: Plans for a massive electric vehicle plant in Chennai

Spread the love

Business

oi-Velmurugan P

சென்னை: ஃபோர்டு இந்தியா நிறுவனம், சென்னையில் ஒரு பிரம்மாண்டமான மின்சார வாகன ஆலையைத் திட்டமிடுகிறது; மலிவு விலை மின்சார வாகனங்களுக்கான ஆசிய-பசிபிக் மையமாக இது உருவெடுக்க போகிறது. அமெரிக்காவின் முன்னணி வாகன நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ், சென்னைக்கு அருகிலுள்ள தனது மறைமலைநகர் ஆலையை ஒரு பெரிய மின்சார வாகன உற்பத்தி மையமாக மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள ஆலையை விரிவுபடுத்தும் இந்தத் திட்டம், மின்சார வாகனங்களை ஒன்றிணைப்பதுடன், பேட்டரிகள், செல்கள், மின்சார மோட்டார்கள் மற்றும் பிற முக்கிய பாகங்களின் உற்பத்தியையும் ஒருங்கிணைக்கக்கூடும் என தெரிகிறது.

“பார்சூன் இந்தியா” இதழ் வெளியிட்ட செய்திகளின் படி, சென்னையை அடுத்துள்ள தனது மறைமலைநகர் ஆலையை மின்சார வாகன உற்பத்தி மையமாக மேம்படுத்த ஃபோர்டு மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐந்து வருடங்களுக்கு பிறகு தற்போது மேற்கொள்ளப்படும் ஆலை விரிவாக்கத்தின் மூலம் மின்சார வாகனங்களை அசெம்பிள் செய்வதுடன், பேட்டரிகள், செல்கள், எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் பிற முக்கிய உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் திட்டமும் உள்ளதாக ஃபோர்டு மோட்டார் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

A Sixer by Ford India Plans for a massive electric vehicle plant in Chennai

மேலும், இந்த ஆலை ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான மலிவு விலை மின்சார வாகனங்களின் மையமாக உருவாக்கப்படும் என்றும், இங்கு உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் முக்கியமாக ஏற்றுமதிச் சந்தையை மையமாகக் கொண்டு இயங்கும் என்றும் கூறப்படுகிறது. இத்திட்டம் இந்தியாவில் ஃபோர்டின் உற்பத்தித் திறனை பெருமளவில் விரிவாக்குவதுடன், குறைந்த விலையிலான மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான ஒரு ஒருங்கிணைந்த தளத்தையும் அந்நிறுவனத்திற்கு வழங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

“ஃபோர்டு நிறுவனம் சென்னை ஆலையை வெறும் பவர்டிரெயின் உற்பத்தித் தளமாக மட்டும் பார்க்காமல், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பெரிய மின்சார வாகன உற்பத்தி மையமாக மாற்ற முயற்சிக்கிறது. மலிவு விலை மின்சார வாகனங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும், மேலும் இந்த ஆலை பிராந்திய மற்றும் உலகளாவிய ஏற்றுமதிச் சந்தைகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும்” என்று நிறுவனத்தை பற்றி நன்கு அறிந்த ஒருவர் கூறினார்.

எனினும், சென்னை ஆலையில் மின்சார வாகன தயாரிப்புத் திட்டம் குறித்து ஃபோர்டு நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தவில்லை. இதுகுறித்து ஃபோர்டு இந்தியா செய்தித் தொடர்பாளரிடம் ஆங்கில இதழான பார்சுன் இந்தியா கேட்ட போது, “கடந்த ஆண்டு நாங்கள் அறிவித்ததில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் சென்னை ஆலை ஏற்றுமதிக்கான பவர்டிரெயின்களை மட்டுமே தயாரிக்கும். இந்த நேரத்தில் பவர்டிரெயின் வகை அல்லது ஏற்றுமதி சந்தைகள் பற்றிய விவரங்களை நாங்கள் வழங்கவில்லை” என்றார்.

முன்னதாக கடந்த அக்டோபர் 2025-இல், மறைமலைநகரில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குவதற்காக ஃபோர்டு நிறுவனம் ₹3,250 கோடி முதலீட்டை அறிவித்திருந்தது. இந்தத் திட்டம் ஏற்றுமதிச் சந்தைகளுக்கான பவர்டிரெயின்களை மட்டுமே மையமாகக் கொண்டு, ஆண்டிற்கு சுமார் 2.35 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யும் திறனுடன் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த இவி தளத்தை உருவாக்க வாய்ப்புள்ள பிரவுன்ஃபீல்டு விரிவாக்கம்

இந்த விரிவாக்கத் திட்டம் புதிய நிலத்தில் ஆலை அமைப்பதற்கு பதிலாக, ஃபோர்டின் தற்போதைய சென்னை ஆலையையே மறுசீரமைத்து விரிவாக்கம் செய்வதாக இருக்கும். மின்சார வாகன அசெம்பிளி தவிர, பேட்டரி பேக்குகள், பேட்டரி செல்கள், எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் பிற மின்சார பவர்டிரெயின் உதிரிபாகங்களை உள்ளடக்கிய உற்பத்திச் சூழல் உருவாக்கப்படும். இதன் மூலம் இவி உற்பத்திச் சங்கிலியின் பெரும் பகுதியை உள்ளூர்மயமாக்கி, செலவுப் போட்டியாற்றலை ஃபோர்டு நிறுவனத்தால் அதிகரிக்க முடியும்.

ஒருங்கிணைந்த இவி மற்றும் பேட்டரி உற்பத்தி செயல்பாட்டிற்கான சாத்தியமான முதலீடு ₹15,000-20,000 கோடியாக இருக்கும் என தொழிற்துறை வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள். இருப்பினும், இத்தகைய திட்டத்திற்கான எந்தவொரு முதலீட்டு தொகையையும் ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இந்த முதலீட்டு அளவு இந்தியாவில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் சில பெரிய இவி மற்றும் பேட்டரி திட்டங்களுக்கு நிகரானது ஆகும். டாடா குழுமத்தின் அக்ரடாஸ் நிறுவனம் குஜராத்தின் சானந்த் பகுதியில் ₹13,000 கோடி ஆரம்ப முதலீட்டில் 20 GWh திறன் கொண்ட பேட்டரி-செல் உற்பத்தி வசதியை அமைத்து வருகிறது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது தமிழ்நாடு உற்பத்தி ஆலைக்கு $500 மில்லியன் ஆரம்ப முதலீட்டை உறுதியளித்துள்ளதுடன், அதன் ஒட்டுமொத்த இந்திய முதலீட்டை $2 பில்லியன் வரை உயர்த்தும் வாய்ப்பையும் கொண்டிருக்கிறது.

அடுத்தகட்ட வளர்ச்சியைத் தீர்மானிக்கும் மலிவு விலை மின்சார வாகனங்கள்

இந்தியாவின் இவி சந்தை வேகமாக விரிவடைந்து வரும் சூழலில் இத்திட்டம் சாத்தியமாகி வருகிறது. வாகன் (Vahan) தரவுகளை மேற்கோள் காட்டி JMK ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின்படி, 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் 15.41 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஆண்டுக்கு ஆண்டு 43% வளர்ச்சியாகும். மேலும், இவி வாகனங்களின் பயன்பாட்டு விகிதம் 8%-லிருந்து 11.43%-ஆக உயர்ந்துள்ளது.

JMK ரிசர்ச் அறிக்கையின்படி, வாகன உற்பத்தியாளர்கள் பல்வேறு விலை வரம்புகளில் இவி மாடல்களை அறிமுகப்படுத்தியதால், 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் மின்சார பயணிகள் வாகனப் பதிவுகள் ஆண்டுக்கு ஆண்டு 83% வளர்ச்சியடைந்துள்ளன.

S&P குளோபல் மொபிலிட்டியின் இந்தியா மற்றும் ஆசியான் வாகனச் சந்தைப் பிரிவு இயக்குநர் புனீத் குப்தா கூறுகையில், “மின்சார வாகனங்கள் எளிதில் வாங்கக்கூடிய விலையில் கிடைப்பது, அதிகப்படியான உள்ளூர்மயமாக்கல், பரந்த தயாரிப்புகள் மற்றும் மேம்பட்ட சார்ஜிங் உட்கட்டமைப்பு ஆகியவற்றைச் சார்ந்தே இவி பயன்பாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சி இருக்கும் என்று தெரிவித்தார்.

“ஃபோர்டு நிறுவனத்திற்கு, சென்னையில் அமையவிருக்கும் சாத்தியமான இவி உற்பத்தித் திட்டம் இந்தியாவில் அதன் உற்பத்திப் பங்களிப்பை மீண்டும் உருவாக்க ஒரு வாய்ப்பை வழங்கும். மேலும், நாட்டின் பொறியியல் மற்றும் விநியோகஸ்தர்கள் முறையைப் பயன்படுத்தி, ஆசிய-பசிபிக் சந்தைக்குத் தேவையான மலிவு விலை மின்சார வாகனங்களை உருவாக்க இது உதவும்” என்றும் புனீத் குப்தா கூறியுள்ளார்.

சென்னையின் இரண்டாவது இன்னிங்ஸ்

தொடர் நஷ்டம் மற்றும் குறைந்த உற்பத்தித் திறன் காரணமாக 2021-ஆம் ஆண்டில் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உள்நாட்டு வாகன உற்பத்தியை நிறுத்தியது. இருப்பினும், தனது சென்னை ஆலையை விற்காமல் தக்கவைத்துக்கொண்டு, பின்னர் உற்பத்தியை மீண்டும் தொடங்க முடிவு செய்தது.
ஃபோர்டு நிறுவனத்தின் மீள்வருகை இதுவரை ஏற்றுமதிச் சந்தைகளுக்கான பவர்டிரெயின் உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தது. ஆனால், தற்போது உருவாகி வரும் இவி திட்டம் இந்த ஆலையை ஒரு ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி தளமாக மாற்றி அதன் உத்தியை விரிவுபடுத்தும்.

இத்திட்டம் நிறைவேறினால், இந்தியாவின் இவி சுற்றுச்சூழல் அமைப்பில் ஃபோர்டு நிறுவனத்திற்கு ஒரு பெரிய பங்களிப்புக் கிடைப்பதுடன், மலிவு விலை மின்சார வாகனங்களுக்கான பிராந்திய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றவும் இது வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *