தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பதவியேற்பு விழா ஒருபுறம் கோலாகலமாக நடக்க, மறுபுறம் சமூக வலைதளங்களில் சுவாரசியமான ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. முன்னாள் சிஎஸ்கே ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்த ஒரு புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவலர், சிஎஸ்கே வீரர் அன்ஷுல் கம்போஜ் போலவே அச்சடித்தாற்போல் இருந்தார்.
இதனைப் புகைப்படமாக எடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அஸ்வின், “கடமை முக்கியம்தான், ஆனால் லக்னோவுக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில் இது கொஞ்சம் அதிகம். இன்று பகல் நேர ஆட்டம், சீக்கிரம் ஒரு டாக்ஸி பிடித்து சேப்பாக்கம் மைதானத்திற்கு வா அன்ஷுல் கம்போஜ். இது பெரிய போட்டி!” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் படத்தில் இருப்பவர் கம்போஜ் அல்ல, அவரைப் போலவே இருக்கும் ஒரு பாதுகாப்பு அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று சேப்பாக்கத்தில் நடைபெறும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். மழை காரணமாக ஆடுகளம் மூடி வைக்கப்பட்டிருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அன்ஷுல் கம்போஜ் திகழ்கிறார். 10 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி ‘பர்பிள் கேப்’ (Purple Cap) ரேஸில் அவர் முன்னணியில் உள்ளார்.
புள்ளிகள் பட்டியலில் 5 வெற்றிகளுடன் 6-வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே, பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே சமயம் 10 போட்டிகளில் 7 தோல்விகளைச் சந்தித்துள்ள லக்னோ அணிக்கு இந்தத் தொடர் மிகவும் சவாலாக மாறியுள்ளது.