புதுக்கோட்டை மாவட்டம், 9-ஏ நத்தம்பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட குன்னவயல் கிராமத்தில் 15 ஆண்டுகளாகச் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பள்ளியில் போதிய குடிநீர் வசதி, தண்ணீர் தொட்டி இல்லாததால் மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். கழிவறைகள் முறையான பராமரிப்பின்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. மின் இணைப்புக்கான மெயின் பாக்ஸ் சேதமடைந்து கீழே விழும் அபாயகரமான நிலையிலும், நுழைவுவாயில் கதவு உடைந்தும், வளாகம் முழுவதும் குப்பைகள் குவிந்தும் காணப்படுகின்றன.

பள்ளி முடிந்த பின் அந்தப் பகுதி இளைஞர்கள் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மது அருந்தி, பாட்டில்களை உடைத்து வீசுவதாகவும், இதனால் மறுநாள் மாணவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், பள்ளி பொருள்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. பலமுறை கண்டித்தும் இது தொடர்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்
இதன் காரணமாக சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை 3 மைல் தொலைவில் உள்ள பிற பள்ளிகளில் சேர்த்துள்ளதாகவும், தினமும் அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வர வேண்டிய நிலையால் பெற்றோரின் வேலை, நேரம், செலவு பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். போதிய பேருந்து வசதியும் இல்லாததால் தொலைதூரப் பள்ளிகளுக்கு அனுப்புவது கூடுதல் சிரமமாக உள்ளது.
இதன் விளைவாக பள்ளியில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டு, ஒன்றாம் வகுப்பில் புதிய சேர்க்கை இல்லாத நிலையும், ஐந்தாம் வகுப்பில் மாணவர்களே இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது பள்ளியின் எதிர்காலத்தையும் கிராமப்புற குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளையும் பாதிக்கிறது.
















எனவே, தூய்மையான குடிநீர், தண்ணீர் தொட்டி, சுகாதார கழிவறைகள், பாதுகாப்பான மின் இணைப்பு, மெயின் பாக்ஸ் சீரமைப்பு, நுழைவாயில் கதவு பழுதுநீக்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மது அருந்துவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பான, சுகாதாரமான கல்விச் சூழலை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.