அண்ணாமலை தனிக்கட்சித் துவங்க உள்ளதாக சில மாதங்களாகவே செய்தி பரவியது. பா.ஜ.,வில் மாநில தலைவர் பதவி பறிப்புக்குப் பின் குறிப்பிடத்தக்க பொறுப்பு எதுவும் அவருக்கு வழங்காத நிலையில், விரக்தியில் இருந்த அவர் தற்போது அமைப்பு துவங்கியுள்ளார். இது அரசியல் கட்சியாக மாற்றப்படும் எனவும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருந்த போது, தன்னை இணைய அழைத்ததாகவும். ஆனால் தான் மறுப்பு தெரிவித்து,பாஜகவில் இணைந்ததாக அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அண்ணாமலை புதிய அரசியல் முன்னெடுப்புகளை எடுக்கவுள்ள நிலையில், ரஜினி ரசிகர்கள் பலரும் அவருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மற்றும் மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ரஜினி நற்பணி மன்றத்தினர் அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
இந்த நிலையில், அண்ணாமலை ரஜினியை ரகசியமாக சந்தித்து தனது புதிய கட்சி தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் உலா வந்தன. ரஜினிகாந்த் ஆசியுடனே அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதாக செய்திகள் பரவின. ரஜினியுடன் அண்ணாமலை இருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில் ரஜினி பெயர், படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய ரஜினி ரசிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில்: நமது அன்பு தலைவர் திரு.ரஜினிகாந்த் அவர்களின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சிக்கோ, அமைப்பிற்கோ பயன்படுத்தகூடாது என தலைவரின் உத்தரவுப்படி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. என கூறப்பட்டுள்ளது.

