அதானி கிரீனின் மெகா சாதனை… 20 GW கிரீன் மின்சாரத்தை உற்பத்தி செய்து புதிய வரலாறு படைத்தது! | Adani Green Becomes India’s First Renewable Energy Company to Cross 20 GW Capacity

Spread the love

India

-Vigneshkumar

மும்பை: அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (renewable energy) திறனில் 20 கிகாவாட் என்ற முக்கிய மைல்கல்லைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் க்ளீன் எனர்ஜி இலக்குகளை நோக்கிய பயணத்தில் இது ஒரு மிக பெரிய மைல்கல்லாகும். முக்கியமாக புதிய திட்டங்களைக் கட்டமைப்பதன் மூலம் இந்த சாதனையை எட்டிய முதல் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் என்ற பெருமையை அதானி கிரீன் எனர்ஜி பெற்றுள்ளது.

தற்போது, இந்தியாவின் பயன்பாட்டு அளவிலான சூரிய மின்சக்தி கட்டமைப்பில் சுமார் 14 சதவீத பங்கையும், ஒட்டுமொத்த சூரிய மற்றும் காற்று மின்சக்தி திறனில் 12 சதவீத பங்கையும் அதானி நிறுவனம் கொண்டுள்ளது.

Aerial view of vast renewable energy solar park

ஆண்டுக்கு 52 பில்லியன் யூனிட் மின்சாரம்

இந்த 20 கிகாவாட் திறன் மூலம், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் ஆண்டுதோறும் 52 பில்லியனுக்கும் அதிகமான யூனிட் தூய்மையான மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த மின் நுகர்வில் கிட்டத்தட்ட 3 சதவீதமாகும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால்.. இந்த மின் உற்பத்தி அளவு என்பது மும்பை மற்றும் டெல்லி ஆகிய இரு பெருநகரங்களின் ஒட்டுமொத்த மின் தேவையைத் பூர்த்தி செய்வதற்கு இணையானது அல்லது நியூயார்க் நகருக்கு ஒரு வருடத்திற்குத் தேவையான மின்சாரத்திற்குச் சமமானது ஆகும்.

தமிழ்நாட்டில் தொடங்கிய பயணம்

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கமுதியில் தனது முதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை தொடங்கிய அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், சரியாக பத்தாவது ஆண்டில் இந்த 20 கிகாவாட் மைல்கல்லை எட்டியுள்ளது. குறிப்பாக, கடந்த 2026ஆம் நிதியாண்டில் மட்டும் அதானி நிறுவனம் புதிதாக 5,051 மெகாவாட் (MW) மின் உற்பத்தித் திறனைக் கூடுதலாக இணைத்துள்ளது. சீனாவிற்கு வெளியே ஒரு நிறுவனம் ஒரே ஆண்டில் மேற்கொண்ட மிக பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் முதலீடு இதுவாகும்!

இந்த அபார வளர்ச்சி குறித்து கருத்து அதானி கிரீன் எனர்ஜியின் செயல் இயக்குநர் சாகர் அதானி, திட்டமிட்ட செயல்பாடும் நீண்ட கால தொலைநோக்கு பார்வையுமே இந்த சாதனையைச் சாத்தியமாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்நிறுவனத்தின் செயல்பாட்டுத் தொகுப்பில் 14.2 கிகாவாட் சூரிய மின்சக்தி, 2.7 கிகாவாட் காற்று மின்சக்தி மற்றும் 3.3 கிகாவாட் சூரிய-காற்று கலப்பின மின்சக்தி திட்டங்கள் உள்ளன. மேலும், சீனாவிற்கு வெளியே உலகின் மிக பெரிய பேட்டரி சேமிப்பு அமைப்பாக 3.55 கிகாவாட் மணி நேர பேட்டரி சேமிப்புத் திட்டத்தையும் இந்நிறுவனம் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

குஜராத்தின் பிரம்மாண்ட கவ்டா பூங்கா

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் 538 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ‘கவ்டா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா’ (Khavda Renewable Energy Park) மிக முக்கிய பங்காற்றி வருகிறது. 30 கிகாவாட் திட்டமிடப்பட்ட திறனுடன் உலகின் மிக பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவாக உருவாகி வரும் இந்த தளத்தில், ஏற்கனவே 9.5 கிகாவாட் சூரிய மின்சக்தி திறன் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்த பூங்காவிற்கான திட்டமிடப்பட்ட மொத்த திறனில் 30 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இந்த 20 கிகாவாட் மின் உற்பத்தித் திறன் மூலமாக, ஆண்டுக்கு 9 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடிவதுடன், 37 மில்லியன் டன்களுக்கும் அதிகமான கார்பன் எமிஷன் தடுத்து நிறுத்தப்படுகிறது. இது சாலைகளில் இருந்து சுமார் 8.1 மில்லியன் கார்களை அகற்றுவதற்குச் சமமாகும்.

தற்போது இந்தியாவின் 12 மாநிலங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்தி வரும் அதானி கிரீன் எனர்ஜி, நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் கார்பன் எமிஷனை குறைக்கும் இலக்குகளுக்கு ஏற்ப, வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் தனது ஒட்டுமொத்த திறனை 50 கிகாவாட்டாக உயர்த்தும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *