Tamilnadu
oi-Vignesh Selvaraj
கோவை: அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் மிக முக்கியக் கோட்டையாகக் கருதப்படும் கோவையில் அரங்கேறியுள்ள ஒரு பரபரப்பான அரசியல் நகர்வு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் மிக முக்கியத் தூணாகவும், கொங்கு மண்டலத்தின் வலுவான தலைவராகவும் கருதப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை தொண்டாமுத்தூரில் தனது ஆதரவாளர்களுடன் நடத்தியுள்ள ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அதிமுகவில் குழப்பம்
சமீபகாலமாக நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருவதாகக் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் கட்சி சந்திக்கும் தொடர் தோல்விகள் மற்றும் அவரது தனிப்பட்ட அரசியல் முடிவுகள் ஆகியவை அதிமுகவின் வாக்கு வங்கியையும் செல்வாக்கையும் சரிவடையச் செய்துள்ளதாக நிர்வாகிகள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில் தனி அணி ஒன்று உருவாகி, தவெக அரசுக்கு ஆதரவு அளித்தது. இதன் காரணமாக அந்த அணியைச் சேர்ந்த கட்சி பதவிகளை அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்து உத்தரவிட்டார்.
மீண்டும் பதவி
பின்னர் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அந்த அணியில் முக்கிய முகமாக இருந்த எஸ்.பி. வேலுமணி சில எம்.எல்.ஏ.க்களுடன் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றனர். அதேசமயம், சி.வி. சண்முகம் எடப்பாடி பழனிசாமியை இதுவரை சந்திக்காமல் இருந்து வருகிறார். சி. விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகியுள்ள நிலையில், விரைவில் தவெகவில் இணைய இருக்கிறார்.
கட்சி பதவிகள் பறிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பல்வேறு பதவிகளை வழங்கி அண்மையில் உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதில், தலைமை நிலையச் செயலாளராகவும், மாவட்டச் செயலாளராகவும் இருந்து பதவி பறிக்கப்பட்ட எஸ்.பி. வேலுமணியை அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக நியமித்து உத்தரவிட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி.
கோவை கூட்டத்தின் பின்னணியும் பரபரப்பும்
இந்நிலையில், எஸ்.பி. வேலுமணி தலைமையில், கோவை தொண்டாமுத்தூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், ஒன்றிய, நகர மற்றும் பகுதிச் செயலாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
வழக்கமாக அதிமுகவின் எந்தவொரு உட்கட்சிக் கூட்டம் அல்லது ஆலோசனை நடைபெற்றாலும், அங்கு மேடையின் பின்னணியிலோ அல்லது பேனர்களிலோ கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோருடன் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படம் பிரதானமாக இடம் பெற்றிருக்கும். ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் படம் எங்குமே இடம்பெறவில்லை.
கூட்ட அரங்கில் தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை வைக்காமல், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் மட்டுமே இடம்பெற்றன. கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமி இருக்கும்போதே, அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவரது படத்தை புறக்கணித்திருப்பது அதிமுக தலைமைக்கு விடுக்கப்பட்ட பகிரங்க சவாலாகப் பார்க்கப்படுகிறது.
எஸ்.பி வேலுமணி பேசியது என்ன?
மேலும் இந்தக் கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி, திமுக – அதிமுக இணைந்து ஆட்சி என்பதில் தான் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் தொடங்கியது. 21 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக இருந்திருக்கிறேன். தற்போது மீண்டும் பழையபடி மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தால்தான் செயல்பட முடியும் என்று பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதோடு, அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்களை வெளியேறவிட்டதாலே சரிவு ஏற்பட்டது என்றும், குறிப்பாக ஓபிஎஸ் அதிமுகவில் இருந்திருந்தால் அது நமக்கு இன்னும் பலமாக இருந்திருக்கும் என்றும் வேலுமணி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக தலைமையின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுப்பதற்குப் பின்னணியில் மிக முக்கியப் பங்காற்றியவர் எஸ்.பி. வேலுமணி. கொங்கு மண்டலத்தின் அரசியல் சாணக்கியர் என்று வர்ணிக்கப்படும் எஸ்.பி.வேலுமணியின் கோட்டையிலேயே தற்போது இபிஎஸ்-க்கு எதிராகப் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளதால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
வட மாவட்டங்களில் சி.வி. சண்முகம் போன்ற தலைவர்கள் ஒருபுறம் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், கொங்கு மண்டலத்திலும் வேலுமணி ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணிக்கத் தொடங்கியிருப்பது அதிமுகவிற்குள் ஒரு புதிய அதிகாரப் போட்டி வெடிப்பதற்கான ஆரம்பப்புள்ளி என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.