சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் விஜய் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோரியிருந்தார். காங்கிரஸூம் தவெகவுக்கு ஆதரவு தெரிவுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த முடிவை காங்கிரஸ் இப்போது கொஞ்சம் தள்ளிப்போட்டுள்ளதாக தகவல்.

தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றவுடன் ராகுல் காந்தி முதல் ஆளாக விஜய்க்கு போனில் வாழ்த்து கூறியிருந்தார். ட்விட்டரிலும் இது இளைஞர்களின் எழுச்சி இதை யாராலும் தடுக்க முடியாது எனக் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவை விஜய் கோரியிருந்தார்.
டெல்லியில் இதுசம்பந்தமாக ஆலோசனைக் கூட்டமும் நடந்திருந்தது. கூட்டத்தின் முடிவில் காங்கிரஸின் அகில இந்திய பொதுச்செயலாளர் வேணுகோபால், ‘விஜய்யின் கொள்கைத் தலைவர்களில் பெருந்தலைவர் காமராஜரும் ஒருவர்’ எனப் பேசியிருந்தார். கிரிஷ் சோடங்கர் போன்ற முக்கியஸ்தர்களும் ‘திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி மட்டுமே’ என்றும் பேசியிருந்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று காலை 11மணிக்கு சத்யமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்து காங்கிரஸ் தரப்பில் விஜய்க்கு ஆதரவு கொடுப்பதை அறிவிக்க திட்டமிட்டிருந்தனர். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்களும் சத்யமூர்த்தி பவனில் திரண்டிருந்தனர். ஆனால், கடைசி நிமிடத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு மதியம் 2 மணிக்கு மேல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
விஜய் தரப்பிலிருந்து அதிமுகவுடன் பேசுவதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் தங்களின் ஆதரவு நிலைப்பாடு பற்றி இறுதி பரிசீலனை செய்து வருவதாக பவன் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.