அதிமுக – திமுக கூட்டணி? "அதெல்லாம் வதந்திகள்; ஆனால்…" – என்ன சொல்கிறார் சிபிஎம் எம்.ஏ. பேபி?

Spread the love

தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி நேற்றைய தினம் அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து சிபிஎம் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, “அதிமுகவை வெளியில் இருந்து ஆதரித்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் திட்டத்துக்குத் தங்களையும் ஆதரவு தெரிவிக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

சண்முகம்
சண்முகம்

ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்ததால் இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” எனப் பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியவர், “அதிமுக – திமுக கூட்டணி பற்றி வரும் செய்திகள் வதந்தி” எனத் தெரிவித்திருக்கிறார்.

அந்தச் செய்தியாளர் சந்திப்பில், “அதிமுக – திமுக கூட்டணி குறித்துப் பேசியிருந்தீர்கள். அது உண்மையா?” எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சிபிஎம் தேசியப் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, “அது எனக்குத் தெரியாது, அதெல்லாம் வெறும் வதந்திகள்.

ஆனால், பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க தலைமையில் ஓர் ஆட்சியை அமைப்பதற்கான ஒரு நகர்வு இருந்தது. அதை மக்கள் நிராகரித்து வருகிறார்கள். எனவே அ.தி.மு.க ஆட்சி அமைக்க வேண்டுமானால், அவர்களுக்குத் தேவையான எண்ணிக்கையிலான ஆதரவு இருக்க வேண்டும்.

யாரெல்லாம் ஆதரவு அளித்தார்கள், அல்லது யாரிடமிருந்து அவர்கள் ஆதரவை எதிர்பார்க்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.

பேபி
பேபி

பா.ஜ.க-வின் கூட்டாளியான அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான எந்தவொரு முயற்சியையும் எங்களால் முடிந்தவரை எதிர்த்துப் போராடுவோம் என்றுதான் நாங்கள் கூறினோம்.

இதைத்தான் நான் தெரிவித்திருக்கிறேன். தி.மு.க-விற்கும் எங்களுக்கும் எப்போதும் நல்ல உறவு இருந்து வருகிறது, நாங்கள் அவர்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறோம்.

நேற்று இரவு கூட சில முக்கியமான தலைவர்களுடன் நான் ஆலோசனை நடத்தினேன். எங்களது தமிழகத் தலைவர்கள், மு.க. ஸ்டாலினைத் தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள்” எனக் கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *