Tamilnadu
oi-Vishnupriya R
வால்பாறை: வால்பாறையை ஒட்டியுள்ள கேரளா மாநில அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை தமிழக கேரள எல்லையை ஒட்டி உள்ள சாலக்குடி ஆற்றின் அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

வால்பாறை வழியாக சென்னை- கோவை, மதுரை- பாண்டிச்சேரி ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தற்போது சப்ரா ஃபால்ஸ் பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதால் அங்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்த முடியாத அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கை காண்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு கற்கள் குவிந்து பயணிக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் நேற்று மரங்கள் கீழே விழுந்து பல மணி நேரம் போக்குவரத்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அதரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தற்போது வரவேண்டாம் எனவும் வனத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
தற்போது கேரள மாநிலத்தில் ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
எனவே சுற்றுலா பயணிகள் கேரள மாநிலத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் எச்சரிக்கை செய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்த அருவிகளில் நீர் வரத்து அதிகமாக இருக்கும். இந்த பகுதியில் சில மலையாள படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அது போல் கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் படம் இங்குதான் ஷூட்டிங் எடுக்கப்பட்டது. அது முதல் புன்னகை மன்னன் அருவி என அழைக்கப்பட்டு வருகிறது.
அது போல் இருவர் திரைப்படத்தில் நறுமுகையே நறுமுகையே என்ற பாடலும் இங்குதான் படமாக்கப்பட்டது. இந்த நீர் மின் திட்டத்தில் கேரளா மின்சார வாரியம் 163 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடி ஆற்றுப் பகுதிக்குச் சுற்றுலாச் சென்றுள்ளனர். அங்குள்ள நீர்வீழ்ச்சி மற்றும் ஆற்றின் அழகை ரசித்தபடி, தடை செய்யப்பட்ட ஆபத்தான பகுதி ஒன்றில் இறங்கிப் செல்ஃபி எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு இளைஞர் ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, ஆற்றின் நடுவே இருந்த ஒரு பெரிய பாறை இடுக்கில் அவர் சிக்கிக் கொண்டார். ஆனால், சுற்றிலும் நீர் ஆர்ப்பரித்து ஓடியதாலும், நீரோட்டம் மிகக் கடுமையாக இருந்ததாலும் அவரால் தாமாக வெளியே வர முடியவில்லை. மரண பயத்தில் அவர் பாறையைப் பிடித்துக் கொண்டு தத்தளித்தார்.
இளைஞரின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மற்றும் விடுமுறையில் வந்திருந்த ராணுவ வீரர் ஒருவர் உடனடியாகச் களத்தில் இறங்கினார்.
ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், உள்ளூர் மக்கள் மற்றும் அங்கிருந்தவர்களின் உதவியுடன் கயிறு ஒன்றை ராணுவ வீரர் ஏற்பாடு செய்தார்.
கயிற்றின் ஒரு முனையைத் தன் உடம்பில் கட்டிக் கொண்டு ஆர்ப்பரிக்கும் ஆற்று நீரில் இறங்கி, பாறை இடுக்கை நோக்கி நகர்ந்தார்.
பாறையை அடைந்த அவர், மரண பயத்தில் இருந்த தமிழக இளைஞருக்கு தைரியம் கூறி, அவர் மீதும் கயிற்றை கட்டியதும் கரையில் இருந்தவர்கள் இழுத்ததும் ராணுவ வீரர், அந்த இளைஞரை பத்திரமாக கரை சேர்த்தார்.
இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் பாறைகள் வழுக்கும். அத்துடன் இதில் ஏராளமான சுழல்கள் உள்ளன. எனவே இங்கு அழகு இருப்பதை போல் ஆபத்தும் இருக்கிறது என்பதை உணர வேண்டும். சாதாரண நாட்களிலேயே இத்தனை ஆபத்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்றால் சொல்லவா வேண்டும்?

