தலையில் துண்டு, நெற்றியில் பட்டை நாமம்.. “”முதலமைச்சர் விஜய் ப்ரோ”.. கோஷமிட்டு விவசாயிகள் போராட்டம்! | Farmers Wearing Towels Stage Protest Over ‘Disappointing’ Tamil Nadu Agriculture Budget

Spread the love

Tamilnadu

oi-Vignesh Selvaraj

நாகப்பட்டினம்: தமிழக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என எதிர்பார்த்த நிலையில் அது முற்றிலும் ஏமாற்ற பட்ஜெட் எனக்கூறி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலையில் துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகள் கோஷங்களை எழுப்பி உள்ளனர்.

தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். விவசாயிகள் எதிர்பார்த்த பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறாதது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Farmers Wearing Towels Stage Protest Over Disappointing Tamil Nadu Agriculture Budget

வேளாண் பட்ஜெட்டில், பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு இடம்பெறவில்லை. மேலும், தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் பலவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதனைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த நரிமணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்கள் தலையில் துண்டு போட்டுக்கொண்டும், நெற்றியில் பெரிய பட்டை நாமம் போட்டுக்கொண்டும் விநோத முறையில் அரசின் கவனத்தை ஈர்கும் வகையில் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும், நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 3,500 ஆக உயர்த்த வேண்டும், கரும்புக்கான ஆதார விலையை டன்னுக்கு ரூபாய் 4,500 ஆக நிர்ணயிக்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், இயற்கை சீற்றங்கள் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

பட்ஜெட்டில் தங்களின் நீண்டநாள் கோரிக்கைகளுக்கு எந்தவித முறையான அறிவிப்பும் வெளியாகாதது மிகுந்த மனவேதனை அளிப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்போவதாகவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *