தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டது தமிழக அரசியல் களத்தில் சலசலப்புகளை உண்டாக்கி விட்டிருக்கிறது.
திமுக, அதிமுக ஆகிய எதிர்க் கட்சிகளுடன் தவெக அரசை ஆதரிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுமே இந்த நியமனத்தை ஏற்கவில்லை.
ஆனால், தன் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பன்டிட் வெற்றிவேலை அரசியல் ஆலோசகராக நியமித்து விட்டு எதிர்ப்பு வந்த பின், அந்த நியமனத்தை ரத்து செய்தது போல் இந்ந முறை விஜய் பின்வாங்க மாட்டார் என்கிற பேச்சுகள் கோட்டை வட்டாரத்தில் கேட்கின்றன.
இந்தச் சூழலில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியின் வேலை என்ன, அவருக்கு சிறப்பு அதிகாரமென எதுவும் உண்டா என்பன போன்ற கேள்விகளுடன் அதிமுக ஆட்சிக் காலத்தில் `இதே” பதவியிலிருந்த தளவாய் சுந்தரத்திடம் பேசினோம்.

”இந்தப் பதவிக்கு யாரை நியமிக்கணும்கிறது தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பட்ட உரிமை மற்றும் அதிகாரம். தனக்கு ரொம்பவும் நம்பிக்கையான நபர்களையே நியமிப்பார் முதல்வர். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான தொடர்பு, தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதுதான் இந்த அலுவலகத்தின் முக்கியமான பணி.
டெல்லியில் தனி அலுவலகம் இருக்கும். அதிகாரிகள், ஊழியர்கள் இருப்பாங்க. அதிகார மட்டத்துல ஆணையர்ங்கிறவர் பொறுப்பு அதிகாரி.
அரசியலமைப்பு சார்ந்த பதவிதான் ‘தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி’னு அழைக்கப்படுது. நான் இந்தப் பதவியில இருந்தப்ப கொஞ்ச நாள் முன்னாடி இங்க தலைமைச் செயலாளரா இருந்த முருகானந்தம் அங்க ஆணையரா இருந்தார்.
முதலமைச்சரோ மற்ற அமைச்சர்களோ டெல்லி வந்தா, அங்க அவங்களுடைய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கறது, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க வேண்டி இருந்தா அதற்கான ஏற்பாடுகளைச் செய்யறது, மாநில அரசின் கோரிக்கைகள் மத்திய அமைச்சகங்களிடம் இருந்தால் அதை ஃபாலோ செய்து தீர்வு காண்பதுன்னு பணிகள் இருக்கும்.