Sports
oi-Yogeshwaran Moorthi
நியூ ஜெர்சி: குழந்தையாக இருந்த லமின் யமால் வளர்ந்து வந்து என்னுடன் நேருக்கு நேர் மோதுவதை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளதாக அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். லமின் யமாலின் ஆட்டத்தை தொடர்ச்சியாக கவனித்து வருவதாக கூறிய மெஸ்ஸி, அவரை கட்டுப்படுத்த அர்ஜென்டினா அணி முயற்சிக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நாளை நள்ளிரவு நியூ ஜெர்சி மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் டிஃபெண்டிங் சாம்பியனான அர்ஜென்டினா அணியை எதிர்த்து ஸ்பெயின் அணி விளையாட உள்ளது. குறிப்பாக ஜாம்பவான் வீரரான மெஸ்ஸியை எதிர்த்து இளம் நட்சத்திர வீரரான லமின் யமால் விளையாட இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே 2007ஆம் ஆண்டு யுனிசெஃப் காலண்டர் புகைப்படத்திற்காக மெஸ்ஸி 6 மாத குழந்தையை குளிப்பாட்டும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியது. அந்த 6 மாத குழந்தை தான் லமின் யமால். சுமார் 19 ஆண்டுகளுக்கு பின் அந்த குழந்தை வளர்ந்து மெஸ்ஸிக்கு எதிராகவே உலகக்கோப்பை தொடரில் விளையாட இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்த இறுதிப் போட்டியை இயற்கையே முடிவு செய்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் லமின் யமால் உடனான புகைப்படம் குறித்து மெஸ்ஸி மனம் திறந்துள்ளார். இதுதொடர்பாக மெஸ்ஸி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்த புகைப்படத்தில் குழந்தையாக இருக்கும் லமின் யமாலுடன் நேருக்கு நேர் மோதவிருக்கிறேன் என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது.
லமின் யமால் அற்புதமான வீரர்.. நான் விரும்பும் பார்சிலோனா அணிக்காக ஆடி வருகிறார். அதனால் லமின் யமாலின் ஆட்டத்தை தொடர்ச்சியாக கவனித்து வருகிறேன். இளம் வயதிலேயே யமால் ஒரு வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். இறுதிப் போட்டியில் அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பார் என்பதில் எந்த சந்தேமும் இல்லை.
ஆனால் அவரை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அர்ஜென்டினா அணி செய்யும். யமாலை கட்டுப்படுத்த நிச்சயமாக முயற்சி செய்வோம். இறுதிப் போட்டியில் ரசிகர்களுக்கு சிறந்த போட்டியை கட்டாயம் கொடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார். வழக்கம் போல் மெஸ்ஸி எந்தவித வாய் வார்த்தைகளிலும் ஈடுபடாமல், எதிரணிக்கு மதிப்பு கொடுத்து பேசி இருக்கிறார்.