“அனுமதிக்க முடியாது..” இந்திய கப்பலை நடுக்கடலில் நிறுத்திய ஈரான்.. ஹார்முஸை சூழும் பதற்றம்! | Iran blocked Indian Oil Tanker in Strait of Hormuz, Warns all Ships to Avoid Omani Corridor

Spread the love

International

oi-Vigneshkumar

தெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையே மீண்டும் போர் வெடித்துள்ளது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஓமன் வழித்தடம் வழியாகப் பயணிக்க முயன்ற இந்திய எண்ணெய் டேங்கர் கப்பலை ஈரான் திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் மோதல் தொடங்கியது. அப்போது இரு தரப்பும் தொடர்ந்து தாக்கிக் கொண்டதால் வளைகுடாவில் நிலைமை மோசமானது. இதனால் ஹார்முஸில் கப்பல் போக்குவரத்து முடங்கிய நிலையில், கச்சா எண்ணெய் விலையும் கூட மிக வேகமாக அதிகரித்தது.

Iran blocked Indian Oil Tanker

தற்காலிக டீல்

இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 24ஆம் தேதி, ஓமன் மற்றும் ஐ.நா. சர்வதேச கடல்சார் அமைப்பு இணைந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த வர்த்தக கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக ஓமன் கடற்கரை வழியாகத் தற்காலிக கடல் வழித்தடத்தை அறிவித்திருந்தன. இந்த வழித்தடத்தின் பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நிலைமை என்ன

இருப்பினும், இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாம். அந்த வழித்தடத்தை பயன்படுத்த முயலும் கப்பல்களுக்கு ஈரான் ராணுவம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.. ஈரான் அங்கீகரித்துள்ள கடல் வழித்தடத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் ஓமன் வழித்தடத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த அனைத்து கப்பல்களும் ஈரான் அனுமதித்த வழித்தடத்திலேயே பயணித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய கப்பல்

இந்தச் சூழலில் தான் இந்திய கப்பல் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஓமன் வழித்தடம் வழியாகப் பயணிக்க முயன்ற இந்திய எண்ணெய் டேங்கர் கப்பலை ஈரான் திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஈரான் அனுமதித்திருந்த வழித்தடத்தைப் பயன்படுத்தாமல் அமெரிக்கா- ஓமன் முன்மொழிந்திருந்த ரூட்டை பயன்படுத்தியதே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று தெரிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து தொடங்கிய மோதல், மீண்டும் இப்போது தீவிரமடைந்துள்ளது.

பின்னணி

குறிப்பாக ஹார்முஸில் என்ன நடக்கும் என்பதே இப்போது மிக பெரிய கேள்வியாக உள்ளது. ஒரு பக்கம் இந்த முக்கிய கடல் வழித்தடத்தை தாங்களே கட்டுப்படுத்துவோம் என்று கூறி வரும் ஈரான், தாங்கள் அனுமதிக்கும் வழித்தடத்தில் மட்டுமே கப்பல்கள் செல்ல வேண்டும் என்றும் அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக கடந்த சில நாட்களில் குறைந்தது மூன்று வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈரான் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இப்படி மீண்டும் அங்கு மோதல் வெடித்துள்ளது.

இந்தியா

ஹார்முஸில் வெடிக்கும் பதற்றம் இந்தியாவுக்கும் சிக்கல் தான். ஏனென்றால் உலகிலேயே அதிக மாலுமிகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இந்திய மாலுமிகள் வணிக கப்பல்களில் பணியாற்றி வருகிறார்கள். முன்னதாக அமெரிக்கா ஈரான் மோதல் தீவிரமடைந்த போது, ஆயிரக்கணக்கான இந்திய மாலுமிகள் வளைகுடா பிராந்தியத்திலிருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *