அன்பே சிவம் – 2 | நம் வேண்டுதல்களைக் கொட்டுகிற இடமா கோயில்கள்? | தவத்திரு பொன்னம்பல அடிகளார்! | anbe sivam part 2 by ponnambala adigalar

Spread the love

அப்பனாகவும், அம்மையாகவும், ஐயனாகவும், அனைத்து உறவாகவும் இறைவன் நமக்குக் காட்சி தருகிறார்.

“அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ,| அன்பு உடைய மாமனும் மாமியும் நீ,

ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,| ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ,

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,| துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ” என்று எல்லா உறவுகளாகவும் இறைவனைப் பார்க்கிறார் அப்பர் பெருமான்.

இறைவன் நம்மோடு உறவாக, உறவோடு உறவாக இருக்கிறான். அந்த பக்தி நிலையை நாம் நாளும் வளர்த்தால், அன்பே சிவமாகி, அவன் நமக்குக் காட்சி தருவான்.

அன்பே சிவமாகக் காட்சி தருகிற இறைவன் எப்படியெல்லாம் காட்சி தருகிறான்?

அப்பர் பெருமானைத் திருவெண்ணீற்று அறையில் இடுகிறார்கள். வெண்ணீற்று அறை என்பது சுண்ணாம்புக் காளவாய். சுண்ணாம்புக் காளவாய் அறையில் அவரைப் பூட்டி வைத்தபோது அவர் பாடுகிற பாடல்:

“மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நிழலே”

என்று பாடுகிறார்.

அடைக்கப்பட்டிருப்பது சுண்ணாம்புக் காளவாய் அறை. வெப்பம் நிறைந்த அறை. கனலாய் இருக்கிற அறை. ஆனால் அது அவருக்கு எப்படி இருக்கிறது? குளிர்சாதன அறையைப் போலக் குளிர்ச்சியாகக் காட்சி தருகிறது.

“மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கிள வேனிலும், மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே” என்று பாடுகிறார்.

வீணையின் கீதத்தைக் கேட்கக் கேட்க இன்பமாக இருக்கிறது. அதற்கு என்ன வேண்டும்? நம் காதுகளுக்குக் கேட்கும் சக்தி இருக்க வேண்டும்.

முழு நிலவு வானத்திற்கு அலங்காரமாக இருக்கிறது. வானத்தின் விண்ணில் அழகாகக் காட்சி தருகிற முழு நிலவைப் பார்க்கப் பார்க்க பரவசம் ஏற்படுகிறது. அதற்கு என்ன தேவை? நம் கண்களுக்குப் பார்க்கும் சக்தி தேவை.

தென்றல் காற்றுக்கு எந்தப் பேதமும் கிடையாது. இன்னார் இனியார், நல்லார் தீயார், உயர்ந்தார் தாழ்ந்தார் என்று எந்தப் பேதமும் பார்க்காமல் அனைவரையும் வருடிச் செல்கிறது.

அந்தத் தென்றல் காற்றைப் போல இறைவனும் புதுமையானவன். அனைவருக்குமாக இருக்கிறான்.

அந்தப் புதுமையான இறைவனை நாம் உணர்ந்து வழிபட்டால், ஒன்றிய உணர்வோடு வழிபட்டால், அவன் நமக்குக் காட்சி தருவான்.

எப்படி?

அன்பே சிவமாகக் காட்சி தருவான்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *