‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அன்பே டயானா’. இந்தப் படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
‘குட் நைட்’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் நாளை (ஜூலை.17) திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் பிரஸ் ஷோ நேற்று நடைபெற்றது.
அந்தவகையில் ‘அன்பே டயானா’ படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இயக்குநர் ராம், ” ‘ஜமா’ பாரியின் இரண்டாவது படம் ‘அன்பே டயானா’.
தமிழில் எனக்கு பிடித்த எழுதி, இயக்கி, நடிக்கும் ஒருவர்களில் பாரி மிகவும் முக்கியமானவர் என்று நினைக்கிறேன். எனக்கு எமோஷனலாக இருந்தது. பாரி ஜெயிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
‘ஜமா’ படத்தை மிகவும் சீரியஸாக எடுத்திருந்தார். ஆனால் இந்தப் படத்தில் தொடக்கத்தில் இருந்தே சிரிக்க வைத்திருக்கிறார். கடைசி 20 நிமிடங்கள்… தமிழ் சினிமாவின் பெஸ்ட் கடைசி 20 நிமிடங்களாக இருக்கும்.
சிரிக்கவும், யோசிக்கவும், நெகிழவும் வைத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் அப்பா, மகன் உறவை வைத்து நிறைய படங்கள் வந்திருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் வந்திருக்கும் அப்பா – மகனை நான் பார்த்தது இல்லை.

சேத்தன் சாரின் மிகப்பெரிய ரசிகர் நான். ‘விடுதலை’, ‘ஜமா’ படங்களில் நன்றாக நடித்திருப்பார். ஆனால் இந்தப் படத்தில் அதையும் தாண்டி நடித்திருக்கிறார். ‘சேத்தன்’ முதல் முறையாக இந்தப் படத்தின் மூலம் சிரிக்க வைத்தார், நெகிழ வைத்தார்.
மொழி, மதம், சாதி, இனம் தாண்டி மகத்தானது தான் காதல் என்று சொல்லி சிரிக்க, சிந்திக்க வைத்த படம் ‘அன்பே டயானா’. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு பிடித்த பாரியின் வணிக ரீதியான வெற்றி இந்தப் படத்தில் இருந்து துவங்கும் என்று நம்புகிறேன்” என்று பாராட்டி பேசியிருக்கிறார்.