“அமித் ஷா பதவி விலக வேண்டும்”.. பெரிய குண்டை தூக்கிப் போட்ட CJP நிறுவனர் அபிஜித் தீப்கே! | CJP Chief Abhijeet Dipke Demands Amit Shah’s Resignation Over ‘Sansad Chalo’ Crackdown

Spread the love

India

oi-Vignesh Selvaraj

மும்பை: ஜூலை 20 ஆம் தேதி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தவிர வேறு யாரும் உத்தரவிட்டிருக்க முடியாது என்றும், அதற்குப் பொறுப்பேற்று அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ராஜினாமா கோரிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

CJP Chief Abhijeet Dipke Demands Amit Shah s Resignation Over Sansad Chalo Crackdown

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் சார்பில் ஒரு மாதத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட தொடர் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தனது சொந்த ஊரான சத்ரபதி சம்பாஜி நகருக்குத் திரும்பியுள்ளார் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே, “நீதித்துறை மீது கூட இன்றைக்கு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆனால், அரசை நோக்கி அதைச் செய்ய முடிவதில்லை. நாட்டில் தற்போது ஜனநாயகம் பெரும் ஆபத்தில் உள்ளது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற மாநில அரசியல் கட்சிகளை உடைப்பதற்கு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை நாம் அனைவரும் பார்த்தோம்.

நாட்டின் முக்கிய அரசு நிறுவனங்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, ஒரு தனிநபரின் சர்வாதிகாரம் உருவாவதற்கு அனுமதித்து விட்டன. ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்பது எதிர்க்கட்சிகளின் பிரச்சனை மட்டுமல்ல. நாட்டின் அனைத்துப் பொதுமக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய ஜென் Z தலைமுறையினர் இந்தியப் பண்பாட்டை சீரழித்துவிட்டதாக யோகா குரு பாபா ராம்தேவ் குற்றம்சாட்டியுள்ளார். காந்திஜி மற்றும் அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி சட்டப்பூர்வமாகப் போராடுவது பண்பாட்டைச் சீரழிப்பது என்றால், அதைத் தான் நாங்கள் செய்திருக்கிறோம். நாட்டின் பண்பாட்டையும் எதிர்காலத்தையும் வழிநடத்தும் திறன் இன்றைய இளம் தலைமுறைக்கு முழுமையாக உள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பியுள்ள அமித் ஷாவின் ராஜினாமா கோரிக்கையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். மாணவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்க அமித் ஷாவைத் தவிர வேறு யாரும் உத்தரவிட்டிருக்க முடியாது. எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *