Tamilnadu
oi-Vignesh Selvaraj
தூத்துக்குடி: தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், கடந்த 18 ஆம் தேதி கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. அவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன், நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 22 ஆம் தேதி மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் தரப்பு மனு அளித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டு 10 நாட்களாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருக்கும் மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான விசாரணை, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சுபா தேவி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதுசம்பந்தமான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதால் எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு (ஜூலை 30) ஒத்திவைத்தார். இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையை இன்று மாலைக்கு ஒத்திவைத்திருந்தார்.
இதையடுத்து, மீண்டும் இன்று மாலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டுள்ளார்.