அமைச்சரவையில் இருந்து வெளியேறுமா விசிக? – ஷாக் கொடுத்த திருமா! – Kumudam

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியல் களத்தில் இதுவரை யாருமே பார்க்காத அனுபவங்களை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். தொங்கு நாடாளுமன்றம், திராவிட கட்சிகள் வீழ்த்தப்பட்டது, எம்.ஜிஆர் சாதனை முறியடிக்கப்பட்டது, முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் சொந்த தொகுதியில் தோற்றது, கல்லாப்பெட்டி கூட்டணி என்று விமர்சித்தவர்களின் உதவியை விமர்சனம் செய்தவரே நாடியது, என பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறின.  

குறிப்பாக, திமுக கூட்டணி கட்சிகளான விசிக, சிபிஐ, சிபிஎம், ஆகிய கட்சிகள் குடியரசுத் தலைவர் அமைந்துவிடக் கூடாது, அதனால் பாஜக நேரடியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிடும் என்பதாலும் தவெக ஆட்சி அமைய வழிவகை செய்தனர்.

ஆனால், இந்த கட்சிகள் மீது தொடர்ந்து வைக்கப்படும் விமர்சனங்கள், அவர்கள் ஆதரவு அளித்திருக்கக் கூடாதா என்ற கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளன. குறிப்பாக விசிக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் அரசியல் தாண்டியதாகவே இருக்கிறது என்பது பலரது கருத்துக்களாக இருந்து வருகின்றது. காரணம், கூட்டணிக் கட்சியுடன் பேசாமால் தவெகவிற்கு அடுத்த நாளே ஓடிச் சென்ற காங்கிரஸ் மீதோ, யோசித்து முடிவெடுத்த கம்யூனிஸ்டு கட்சிகள் மீதோ வைக்கப்படாத விமர்சனம், இடதுசாரிகள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதை பொறுத்தே தங்களுடைய முடிவு இருக்கும் என்று கடைசியாகவே தவெகவிற்கு ஆதரவு அளித்த விசிக மீது சாதி ரீதியான, திருமா என்ற தனிநபர் மீதான விமர்சனமாக அவை இருந்து வருகின்றன.

ஏன் தவெக அமைச்சரவையில் விசிக இணைந்தது? கோடிக் கணக்கில் பேரம் பேசப்பட்டதா? திமுக கூட்டணியை விட்டு விசிக வெளியேறியதா? திருமா சொந்த லாபத்திற்காக செயல்படுகிறாரா? போன்ற கார்த்தமான கேள்விகள் விசிகவை மட்டுமே குறிவைத்து கேட்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவையெல்லாவற்றையும் மீறி, தலித்துகளுக்கான தீர்க்கமான குரலாகவே திருமா இருக்கிறார்.

இந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவையில் இருந்து வெளியே வருவோம் என்று திருமாவளவன் கூறியுள்ளது தவெகவினரை ஷாக்காக்கியுள்ளது.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய திருமாவளவன், “அமைச்சரவையில் இருந்தாலும் நாங்கள் விலகி இருக்க கூடாதா. தவெகவின் சந்தேகத்தை போக்குவதற்காகவே நாங்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளோம். இடதுசாரிகளும் வெளியே நிற்கிறார்கள். திருமாவளவனும் வெளியே நிற்கிறார். எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை ஏற்படலாம். திடீரென தவெக ஆதரவை வாபஸ் பெற்றால் என்ன செய்வது. ஆதரவு தெரிவித்துவிட்டே நாங்கள் திமுக கூட்டணி தான் என்று சொல்கிறார்கள் என நினைக்கிறார்கள். எந்த நேரத்திலும் நாங்கள் அமைச்சரவையில் இருந்து வெளியேறலாம். வர முடியாது என்பதற்கு என்ன இருக்கிறது. நாங்கள் ஆதரவளித்தோம். அவர்கள் அமைச்சரவையில் பங்களித்தனர். அமைச்சரவையில் என்பதற்காகவே இணைந்துவிட்டோம் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம் என்று அர்த்தமில்லை. விசிக தவெக கூட்டணி இன்னும் உருவாகவில்லை. இப்படியும் அரசியல் செய்ய முடியும். விசிவால் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும். விலகி இருந்தே அமைச்சரவையில் தொடர முடியும்என்றார்.

தொடர்ந்து பேசிய திருமா, தனிப்பட்ட முறையில் தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறுவது ஒத்துப்போகவில்லை என்றும், ஆனால் பொதுச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூறியதை கேட்டு, அவர்களுக்கு மதிப்பளித்தே அமைச்சரவையில் இடம்பெற சம்மதித்த்தாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருமாவளவனின் பேச்சு, விசிக விரைவில் தவெகவுடனான உறவு முறித்துக் கொண்டு வெளியே வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தவெகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *