எங்கள் முடிவை கூட்டணிக் கட்சிகளுக்கு தெரியப்படுத்தியபோது, கம்யூனிஸ்ட்டுகளும் வி.சி.க-வினரும் கூட்டணி அரசாங்கத்தில் இடம்பெற மறுத்துவிட்டனர். தார்மீக ரீதியாக வெளியிலிருந்து ஆதரவளிப்பது என முடிவெடுத்தனர். அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் தர ஆலோசித்த முதல்வர், மீதமிருக்கும் பதவிகளை த.வெ.க-வினருக்கு பிரித்தளிக்க முடிவெடுத்தார்.
அந்தச் சூழலில்தான், யாரும் எதிர்பாராத விதமாக எங்களுக்கு அ.தி.மு.க-விலிருக்கும் 25 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவளித்தனர். ஆட்சி அதிகாரத்துக்குள் வர விரும்பும் அவர்கள், எட்டு அமைச்சர் பதவிகளையும் ஆறு வாரியத் தலைவர் பதவிகளையும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், ஐந்து அமைச்சர் பதவிகளை மட்டுமே தர முடியுமென த.வெ.க தலைமை கூறிவிட்டது. இதனால்தான், இடியாப்ப சிக்கலில் சிக்கியிருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம்.
அ.தி.மு.க-விலிருந்து வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் அமைச்சராக விரும்புகிறார்கள். மின்சாரத்துறை, கனிமவளத்துறை, நகராட்சி நிர்வாகம், சமூகநலத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை என்று பவர்புல்லான இலாகாக்களை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் விரும்பிய எண்ணிக்கையையும் இலாகாக்களையும் ஒதுக்க முடியாமல் தவிக்கிறார் முதல்வர் விஜய்.
அமைச்சரவை விரிவாக்கத்திற்காக காக்க வைக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களை ஊருக்குக் கிளம்பச் சொல்லிவிட்டது தலைமை. அமைச்சர்களாக பொறுப்பேற்ற அருண்ராஜ், செங்கோட்டையன், கீர்த்தனா உள்ளிட்டவர்களும் அவரவர் ஊருக்குப் புறப்பட்டுவிட்டனர். ஞாயிற்றுக்கிழமைதான் சென்னை திரும்பவிருக்கிறார்கள்.