Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதியின் திமுக வேட்பாளராக கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் சாலமன் டேவிட்டை களமிறக்க ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அம்பாசமுத்திரம் தொகுதியில் கட்டாயம் திமுக வெற்றி பெறும் என்றும், அதற்கான பொறுப்பை தன்னிடம் விட்டுவிடுங்கள் என்று அனிதா ராதாகிருஷ்ணன் நேரடியாக திமுக தலைமையிடம் பேசி இருக்கிறார்.
அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியான தவெக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இங்கு இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், தவெக மற்றும் அதிமுக-விற்கு டஃப் கொடுக்கும் வகையில் திமுக தற்போதே தனது பலத்த வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பாக நின்ற இசக்கி சுப்பையா 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி களமிறங்கி 2வது இடம் பிடித்தது. தவெக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் இசக்கி சுப்பையாவுக்கான ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்றே பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் இம்முறை திமுக நேரடியாக களமிறங்குவதால், அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல் களம் சுவாரஸ்யமாகி இருக்கிறது. அம்பாசமுத்திரம் தொகுதியில் கணிசமாக இருக்கும் குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கிகளைக் குறிவைத்து திமுக தலைமை காய் நகர்த்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் சாலமன் டேவிட்டை வேட்பாளராகக் களம் இறக்க ஆலோசனை நடந்து வருகின்றன.
இவருக்கு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவும் உள்ளது. சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பின் அனிதா ராதாகிருஷ்ணனின் செயல்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்த இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியை தனது கட்டுப்பாட்டில் விட்டுவிடுங்கள்.. நிச்சயம் வென்று காட்டுகிறேன் என்று திமுக தலைமையிடம் அனிதா ராதாகிருஷ்ணன் நேரடியாக கேட்டு பொறுப்பை எடுத்து கொண்டுள்ளார்.
ஏற்கனவே தேர்தல் தோல்விக்கு பின் அதிமுக நிர்வாகிகளை திமுக பக்கம் இழுத்து வரும் பணிகளில் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிரமாக உள்ளார். அதிமுக நிர்வாகிகள் மட்டத்திலும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதால், இசக்கி சுப்பையாவின் வெற்றி எளிதாக இருக்காது என்று பார்க்கப்படுகிறது.