Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகத் தர்மசாலாவில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிந்தைய அதிகாரப்பூர்வ செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இந்திய அணியின் இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி செய்த நெகிழ்ச்சியான காரியம் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களையும் வென்றுள்ளது.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்த போது, திடீரென அவரது தாயாரிடம் இருந்து வந்த போன் காலை (Phone Call) நிறுத்தி நிதானமாக எடுத்துப் பேசி நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். போட்டியின் வெற்றி குறித்து செய்தியாளர்கள் மத்தியில் நிதிஷ் குமார் ரெட்டி பேசிக் கொண்டிருந்த போது, மைக்ரோஃபோன்களுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது மொபைல் போன் அடித்தது.

திரையில் ‘அம்மா’ என்று வந்ததைக் பார்த்ததும், நிதிஷ் எவ்விதத் தயக்கமும் இன்றி செய்தியாளர்களைப் பார்த்து, “மன்னிக்கவும், நான் இந்த காலைப் பேசியாக வேண்டும்” என்று பணிவுடன் கூறினார். தொடர்ந்து போனை எடுத்த அவர், அம்மா.. நான் இன்னும் ஐந்து நிமிடத்தில் மீண்டும் கூப்பிடுகிறேன் என்று கூறிவிட்டு போனை வைத்தார்.
இதனால் அங்கிருந்த செய்தியாளர்கள் அறையில் ஒரு நிமிடம் சிரிப்பலையும் நெகிழ்ச்சியும் ஏற்பட்டது. இந்த அழகிய தருணத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதற்கு, “போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பு வேண்டுமானால் காத்திருக்கலாம்.. ஆனால் அம்மாவின் அழைப்பு ஒருபோதும் காத்திருக்கக் கூடாது” என்று பதிவிட்டுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், “எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும் அம்மாவிற்கு முன்னுரிமை கொடுக்கும் இவரின் குணம் போற்றத்தக்கது” என்று பாராட்டி வருகின்றனர். மழை காரணமாக 25 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு நிதிஷ் குமார் ரெட்டியின் பந்துவீச்சும் முக்கியக் காரணமாக அமைந்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடி சதமடித்த ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சீனியர் வீரர் முகமது நபி ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தினார். தனது 4 ஓவர்களில் வெறும் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனால் நிதிஷ் குமார் ரெட்டியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.