அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இப்போது உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை மற்றும் நன்கொடைகள் முறைகேடு செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
சமூக ஊடகங்களில் இது தொடர்பான குற்றச்சாட்டுகள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஸ்ரீ பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழு இது குறித்து அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பத்ரிநாத் கோயிலுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் மற்றும் ரொக்க பணத்தில் கையாடல் செய்வது மற்றும் முறைகேடுகள் நடப்பதாக செய்தி வெளியானது.
அதோடு ‘பைரவ் சேனா’ என்ற இந்து அமைப்பின் நிறுவனத் தலைவரான சந்தீப் கத்ரி என்பவரும் கோயில் உண்டியல் மற்றும் நன்கொடையில் முறைகேடு நடப்பதாக கோயில் கமிட்டிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

கோயில் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி சோஹன் சிங் ரங்கட்டிற்கு நேரடியாக அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில், காணிக்கை அறையில் நடந்த துல்லியமான முறைகேடுகளைக் குறிப்பிட்டு, குறிப்பிட்ட சில ஊழியர்களைக் குறிவைத்துக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
ஜூலை 3 அன்று அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், பத்ரிநாத் தாமில் காணிக்கை எண்ணும் பணியின் போது திருட்டு நடந்ததாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகக் கடிதத்தை அனுப்பியவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுவின் தலைவருடைய தனிச் செயலாளர் என்று கூறப்படும் ஒரு நபர், பக்தர்களின் காணிக்கைப் பணத்தைத் திருடியதாகப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த முழு விவகாரத்திலும் எவ்வித பாரபட்சமுமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது
பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுவின் (BKTC) தலைவர் ஹேமந்த் திவேதி இது குறித்து கூறுகையில், இந்த விவகாரத்தில் எவ்வித பாரபட்சமுமின்றி, உண்மைகளின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதே நேரத்தில், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது என்றார். இந்த விசாரணைக்குப் பிறகு ஏதேனும் ஊழியர் குற்றவாளி என்று கண்டறியப்பட்டால், விதிகளின்படி அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
சமூக ஊடகப் புகார்களைத் தானாக முன்வந்து கவனித்த கோயில் குழு, லட்சக்கணக்கான பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கையைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக அணுகுவதாகவும், 24 மணி நேரத்திற்குள் அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் புகார்கள் குறித்து கோயில் நிர்வாகம் மிகுந்த தீவிரத்துடன் செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.

கோயில் கமிட்டி இது குறித்து கூறுகையில், ”பத்ரிநாத் தாமில் பக்தர்களின் காணிக்கைகளை எண்ணுவதற்கு முறையான மற்றும் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வங்கி ஊழியர்கள், கோயில் கமிட்டியினர், அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்படுகிறது” என்றது.
அடுத்தடுத்து வரும் உண்டியல் புகார் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது