ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரேயொரு தனித்தொகுதி அரக்கோணம். இந்தத் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றிபெற்றிருக்கிறார் அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளரான சு.ரவி.
சிட்டிங் எம்.எல்.ஏ-வான சு.ரவியே இந்த முறையும் போட்டியிட்டார். அதேபோல, தி.மு.க கூட்டணியில் வி.சி.க சார்பாக எழில் கரோலின், நா.த.க-வில் ராஜ்குமார், த.வெ.க-வில் காந்திராஜ் களமிறங்கினார்கள்.
கடந்த தேர்தலின்போது, வி.சி.க 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க-விடம் தோல்வியடைந்த நிலையில், இந்த முறையும் தொகுதிக்கு முன்பின் அறிமுகமில்லாத எழில் கரோலின் சென்னை மாடம்பாக்கத்தில் இருந்து களமிறக்கப்பட்டது, வி.சி.க-வுக்குத் தோல்வி முகத்தையே கொடுத்திருக்கிறது.
வி.சி.க வேட்பாளரை விடவும் த.வெ.க வேட்பாளர் காந்திராஜிக்கு உள்ளூர் செல்வாக்கு அதிகம். இதனால், களத்தில் அ.தி.மு.க-வுக்கும், த.வெ.க-வுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் எனக் கணிக்கப்பட்டது.

அதைபோலவே, இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையிலும் த.வெ.க தொடர்ந்து முன்னிலை வகித்துக்கொண்டிருக்கிறது. முதல் சுற்றில் த.வெ.க வேட்பாளர் காந்திராஜ் 3,699 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார்.
அ.தி.மு.க வேட்பாளர் சு.ரவி 2,983 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், வி.சி.க வேட்பாளர் எழில் கரோலின் 2,626 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தார்கள்.
தொடர்ந்து, 6-வது சுற்றுவரை த.வெ.க வேட்பாளரே முன்னிலை வகித்து வருகிறார். 7-வது சுற்று முடிவில் த.வெ.க 27,393 வாக்குகளும், அ.தி.மு.க 19,830 வாக்குகளும், வி.சி.க 17,207 வாக்குகளும் பெற்றிருந்தது.
அதன்படி, 7,563 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க வேட்பாளர் காந்திராஜ் முன்னிலையில் இருக்கிறார். மூன்று முறை தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டிருந்த சு.ரவி இந்த முறையும் தெம்போடு களம்கண்ட நிலையில் த.வெ.க-வுக்குப் பதிவாகியுள்ள வாக்குகள் அவருக்குக் களக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.