தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்றுச் சாதனையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில், தற்போதைய நிலவரப்படி 100-க்கும் மேற்பட்ட இடங்களில் த.வெ.க முன்னிலை வகித்து வருவது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் விஜய்யின் இந்த அதிரடி வெற்றி குறித்து அவரது தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகிழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், “ஒரு தந்தையாக நான் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். என் மகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரிடம் இருந்த தன்னம்பிக்கை பிரமிக்கத்தக்கது.
தமிழகத்தின் முதலமைச்சராக நான் வருவேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை விஜய்யிடம் இருந்தது. இன்று அந்த நம்பிக்கை பலித்து வருவதைப் பாராடுகிறேன். யாரோடும் கூட்டணி வைக்காமல், தனது சொந்தக் காலில் நிற்பேன் என்ற ஒரு தலைவனுக்கே உரிய துணிச்சலை விஜய் வெளிப்படுத்தினார். இது விஜய்க்கு கிடைத்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி” எனக் குறிப்பிட்டார்.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகப் பெரிய அளவில் கூட்டணி இல்லாமல் களம் இறங்கிய தவெக, முதல் தேர்தலிலேயே இத்தனை இடங்களில் முன்னிலை வகிப்பது அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவு ஆகியவை இந்த “வரலாற்று வெற்றிக்கு’ முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.