புதுச்சேரி சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், “மாநில அந்தஸ்துக்காக அரசு குரல் கொடுக்கும்போது, பஞ்சபாண்டவர்கள் போல தி.மு.க எப்போதும் துணை நிற்கும். தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டுக்கு முதலமைச்சர்களை அழைப்பது வழக்கம்.
ஆனால் சமீபத்தில் மகாபலிபுரத்தில் நடந்த அந்த மாநாட்டில் புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் அழைப்பு வந்தது. அதனால் இரண்டு உரைகள் தயாரிக்கும் நிலை ஏற்பட்டது. கவர்னரின் உரையில்தான் அதிக கருத்துக்கள் இடம்பெறும். முதலமைச்சருக்கு இருக்காது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர்தான் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும். கவர்னருக்கு சில பொறுப்புகள் உள்ளன. ஆனால் அமைச்சர்களை நியமிக்க முதலமைச்சர்தான் பரிந்துரை செய்ய வேண்டும். அதை கவர்னர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அனுமதிக்க வேண்டும். அதேபோல அமைச்சர்களுக்கான துறைகளை, முதலமைச்சர் பரிந்துரை செய்தவுடன் கவர்னர் ஒப்புதல் அளித்து வெளியிட வேண்டும்.
ஆனால் தற்போதைய கவர்னர் அப்படி ஒப்புதல் தரவில்லை. அதனால் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து வலியுறுத்தினோம். அதன் பின்னர்தான் கவர்னர் மாளிகையில் வைத்து அமைச்சர்களுக்கு என்ன இலாகா வழங்கலாம் என்று பேச்சுவார்த்தை நடக்கிறது.