Tamilnadu
oi-Velmurugan P
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு 2026-2027-ம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (எமிஸ் தளம்) இன்று தொடங்கி உள்ளது. வரும் ஜூலை 30ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஒட்டுமொத்தமாக தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வித் துறையில் 67 ஆயிரத்து 390 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் தாங்கள் விரும்பும் மாவட்டத்தில் பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதளம் மூலமாக நடைபெறும் என்றும், மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கும் அனைத்துவகை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில், 15.6.2026 முதல் 22.6.2026 வரை EMISல் இணையத்தில் பதிவேற்றலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கு விண்ணப்பிக்க ஆசிரியர்கள், பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணி நிறைவடைந்திருக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனிடையே விண்ப்பிப்பதற்கான அவகாசம் கடந்த மாதம் (ஜூன்) 22-ந்தேதியுடன் நிறைவடைந்தது.

தொடர்ந்து இறுதி முன்னுரிமைப் பட்டியல் நேற்று வெளியானது. அதன்படி தொடக்கக் கல்வியில் 21 ஆயிரத்து 372 இடைநிலை ஆசிரியர்கள், 4 ஆயிரத்து 447 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,003 நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், 7 ஆயிரத்து 249 பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 34,071 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
அதேபோன்று பள்ளிக்கல்விக் கல்வியில் 17 ஆயிரத்து 426 பட்டதாரி ஆசிரியர்கள், 10 ஆயிரத்து 475 முதுநிலை ஆசிரியர்கள், 1,269 உடற்கல்வி ஆசிரியர்கள், 537 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 978 மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், 981 கணினி ஆசிரியர்கள் என பல்வேறு பதவிகளுக்கு 33 ஆயிரத்து 319 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வித் துறையில் 67 ஆயிரத்து 390 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாவட்டத்திற்குள் மாறுதல் கோரி 33,319 ஆசிரியர்களும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரி 20,541 ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர். தொடக்கக் கல்வித்துறையில் 34,701 ஆசிரியர்கள் விண்ணப்பித்ததில், 33,601 ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் கலந்துகொள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் அனுமதி அளித்துள்ளனர்.
இதையடுத்து அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு (மாவட்டத்துக்குள்) இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 30-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொதுமாறுதல் கலந்தாய்வில் வழங்கப்படும் முன்னுரிமை
முற்றிலும் கண்பார்வையற்றவர் 100%, மாற்றுத்திறனாளிகள் – 40% அதற்கு மேல் உடற்குறைபாடு (கண்பார்வை உட்பட) உள்ளவர்கள், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தையுள்ள பெற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, புற்றுநோயாளிகள், மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள், ராணுவத்தில் பணிபுரிபவரின் இணையர், விதவை , மனைவியை இழந்தவர், 40 வயது கடந்த முதிர்கன்னியர், சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற பெண் ஆசிரியை மற்றும் தற்போது பணிபுரியும் பள்ளியில் 5 ஆண்டுக்கு மேல் பணியாற்றுபவர்கள், கணவன், மனைவி பணி முன்னுரிமை (30 கி.மீக்கும் மேல்) முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்படுவர்.
மனமொத்த மாறுதல்கள் (Mutual Transfer) சார்பான விண்ணப்பங்கள், பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்பு விண்ணப்பிப்பது தொடர்பான அறிவுரைகள் பின்னர் வழங்கப்படும்.
மேலும், மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டறியப்படின் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இயக்குநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கலந்தாய்வு நடைபெறும் நாளில் மாற்றுப்பணி அனுமதிக்க இயலாது எனவும், தற்செயல் விடுப்பு அளித்துவிட்டு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வருகை புரியாமலோ (Absent & Late) தாமதமாக வருகை புரிந்தாலோ கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாது.
கலந்தாய்வு நடைபெறுவதற்கு அளிக்கப்பட்டுள்ள கால அட்டவணையின்படி மாறுதல்கோரிய ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் உரிய தேதியில் வெளியிடப்படும். அப்பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் EMIS Online வழியே உரிய விவரங்களை தெரிவித்திட வேண்டும்.
மேற்படி திருத்தங்கள், முறையீடுகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு இறுதி முன்னுரிமைப் பட்டியல் (Final Seniority List) வெளியிடப்பட்ட பிறகு திருத்தங்கள், முறையீடுகள் ஏதும் இருப்பின் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

