‘ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளையை தத்தெடுத்துக் கொண்டாரா திருமாவளவன்?’ என விஜய் அமைச்சரவைக்கு வி.சி.க சென்றதை விமர்சித்து, அக்கட்சியிலிருந்து விலகிய ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பனையூர் பாபு விரைவில் தி.மு.க-வில் இணைய இருப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

நம்மிடம் பேசியவர்கள், “கடந்த ஆறு மாதங்களாக செய்யூர் தொகுதியை தயார் செய்து வைத்திருந்தார் பனையூர் பாபு. எந்த ஆலோசனையுமின்றி செய்யூர் தொகுதியை சிந்தனைச் செல்வனுக்கு கொடுத்துவிட்டார். இதனால் கடும் அப்செட்டான பாபு, வி.சி.க-விலிருந்து ஒதுங்கியிருந்தார்.
சீட் கிடைக்காத விரக்தி, கட்சியில் முக்கியத்துவம் இல்லை உள்ளிட்ட காரணங்களுடன் அவர் விலகலாம் என கிசுகிசுக்கப்பட்டன. இந்த சூழலில், விஜய் அமைச்சரவையில் வி.சி.க பங்கேற்றதையும் பனையூர் பாபு துளியும் விரும்பாத நிலையில் மே 24-ம் தேதி மாலை விலகினார். அவருக்கு தி.மு.க தரப்பிலிருந்து அழைப்பு வந்திருக்கும் நிலையில் அதையேற்று அவர் விரைவிலேயே தி.மு.க-வில் இணையலாம்” என்றனர்.
இதுகுறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம், “வி.சி.க, த.வெ.க அமைச்சரவையில் பங்கேற்றதை எங்கள் கட்சித் தலைமைக்கு விரும்பவில்லை. எனவே வி.சி.க-வில் அப்செட்டாக இருப்போரை கட்சிக்குள் இழுக்க முடிவெடுத்து சம்பந்தப்பட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.
அதனடிப்படையில், பனையூர் பாபுவை அழைத்து பேசியது தி.மு.க தலைமை. அப்போது பிடி கொடுக்காத பாபு, தற்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். வரும் ஜூன் 7-ம் தேதி அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்தில் ஆயிரக் கணக்கான வி.சி.க-வினருடன் பனையூர் பாபு இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு இணைந்தால் மதுராந்தகம், செய்யூர் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம்” என்றனர்.