ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நேற்று (ஜூலை 26)ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் LGBTQ+ சமுதாயத்தினர் குறித்து பேசியிருக்கிறார்.
அவர் பேசியதாவது…
“இங்கே சமுதாயத்தில் LGBTQ+ இருக்கிறது தான். சமூகத்தில் எல்லா இடங்களிலும் இத்தகைய போக்குகள் காணப்படுகின்றன.
இதில் சில இயற்கையிலேயே அமைந்தவை. இதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் அவர்கள் அப்படித்தான் பிறக்கிறார்கள்.
ஆனால், சில விஷயங்கள் பிற்காலத்தில் மனநிலை மாற்றங்களாலோ அல்லது உடல் ரீதியான ஈர்ப்புகளாலோ உருவாகின்றன.

அவர்களுக்கும் வாழும் உரிமை உண்டு
இது உலகம் முழுவதும் இருக்கிறது எனும் போது, நம் நாட்டில் மட்டும் இல்லை என்று நாம் சொல்ல முடியாது. நாமும் மனிதர்கள் தான். எனவே இங்கும் இவை இருந்தன.
ஆனால் நம் கலாச்சாரத்தில் இவர்களுக்கென்று ஒரு தனித்துவமான வழிமுறை சத்தமில்லாமல் உருவாக்கப்பட்டது. சில விஷயங்களை குணப்படுத்த முடியும் என்றும், அவ்வாறு முடியாதவர்களும் மனிதர்கள் தான் என்றும், ‘அவர்களுக்கும் வாழும் உரிமை உண்டு’ என்றும் நமக்கு சொல்லப்பட்டுள்ளது.
சிகண்டி…
அவர்களை சமூகத்திலிருந்து நாம் ஒதுக்கி வைப்பதில்லை. சமூக வாழ்வின் ஒரு பெரிய அங்கமாக அவர்களுக்கும் ஒரு இடம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களைத் தாழ்வாகப் பார்க்காதீர்கள். உதாரணமாக, ‘சிகண்டி’ ஒரு அரசனாக மற்ற வீரர்களுக்கு இணையாகப் போரிட்டார். இதற்கான ஒரு ஏற்பாடு நம்மிடம் பழங்காலத்திலிருந்தே இருந்தது.
இன்றும் கூட அவர்களுக்கென்று தனித்தெய்வங்கள், கோவில்கள் மற்றும் ‘மஹா மண்டலேஷ்வர்’ பட்டங்கள் இருப்பதை நாம் காண்கிறோம்.

நம் சமூகத்தின் ஒரு அங்கம்
அவர்கள் கும்பமேளாவிற்கும் வருகிறார்கள். எனவே இதைப் பற்றி வீணாக ஆரவாரம் செய்யாமல், சமூகத்தின் அனுதாபமும் அக்கறையும் குறையாமல் இருக்கவும், அவர்கள் ‘நம் சமூகத்தின் ஒரு அங்கம்’ என்பதை உறுதிப்படுத்தவும் மிக அமைதியாகச் சரியான ஏற்பாடுகளை நாம் செய்திருக்கிறோம்.
தற்போதைய காலத்தில் புதிய கேள்விகள் எழுகின்றன, அவற்றுக்கு நேரடி விடைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய ‘ஒருங்கிணைந்த பார்வையின்’ அடிப்படையில் சிந்தித்தால், எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைக்கும்” என்றிருக்கிறார்.