அ.தி.மு.க.வில் ஆடுபுலி ஆட்டம்… எடப்பாடிக்கு எதிராக சசிகலா அணி ஸ்கெட்ச்! – Kumudam

Spread the love

அ.தி.மு.க. அவைத் தலைவராக சசிகலா, பொதுச்செயலாளராக வேலுமணி, இணை பொதுச் செயலாளராக சண்முகம், பொருளாளராக நத்தம் விஸ்வநாதன் என ஸ்கெட்ச் போட்டு வேலை செய்கிறது எடப்பாடி அதிருப்தி நிர்வாகிகள் டீம். இது ஒர்க் அவுட் ஆனால் எடப்பாடி வெளியே, சசிகலா உள்ளே என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதைத் தடுக்க எடப்பாடியும் பகீரத முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், பரபரத்துக் கிடக்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை!

இதுகுறித்து வேலுமணி, சி.வி.சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிலரிடம் பேசினோம். “மே 4ம் தேதி அன்றே அ.தி.மு.க.வின் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் எடப்பாடியிடம், தவெ.கவுக்கு நாம் ஆதரவு கொடுத்தால் 15 அமைச்சர்கள் தருகிறார்கள்’ என்றார்கள். ஆனால், எடப்பாடி தரப்போ தி.மு.கவுடன் உறவு என்றது. அதற்கு சண்முகம் எடுத்த எடுப்பிலேயே தடை போட்டுவிட்டார். அது முதலே சி.வி.எஸ். இ.பி.எஸ். இடையே மோதல் தொடங்கியது.

அப்போதே எங்கள் தரப்பு மாஜி அமைச்சர்கள், எங்களுடன் வந்த 35 எம்.எல்.ஏ.க்களில் 20 பேருக்காவது தலா 10 ஸ்வீட் பாக்ஸுகளைக் கொடுத்திருந்தால் எங்கள் தரப்பு எடுத்த முயற்சி ஆரம்பத்திலேயே வெற்றி பெற்றிருக்கும். ‘யாரும் நம்மை விட்டுப்போக மாட்டார்கள்’ என்று அலட்சியமாக இருந்தார்கள். அந்த நேரத்தில் எடப்பாடி, எங்கள் தரப்பிலிருந்து 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை மூன்று முதல் ஐந்து ஸ்வீட் பாக்ஸுகளை கொடுத்து, தன் பக்கம் இழுத்துவிட்டார். அதன்பிறகு முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என அனைவரது பதவிகளையும் பிடுங்கினார். வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்த பிறகே த.வெ.க. அரசுக்கு அதரவளித்த எம்.எல்.ஏ.க்களின் பதவி தப்பியது.

பிறகு முன்னாள் அமைச்சர்களுக்கு பழையபடி பொறுப்புக்களை போடாமல் டம்மி பொறுப்புகளைப்  போட்டார். இதை வேலுமணி, சண்முகம் ஏற்கவில்லை. குறிப்பாக, சண்முகத்திற்கு இதுவரை எந்த பதவியும் வழங்கப்படவில்லை.

ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய, டெல்லி சென்றபோது முக்கிய புள்ளிகளை சந்தித்த சண்முகம், அமித் ஷாவை சந்தித்து ‘எடப்பாடியை நம்பினால் வரும் 2029 தேர்தலில் ஒரு எம்.பி. சீட் கூட அவரால் வெல்ல முடியாது. சசிகலா, தினகரன் என கட்சியிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவந்தால்தான் கட்சிக்கும் கூட்டணிக்கும் நல்லது’ என்று சொல்லியிருக்கிறார். இதற்கிடையே வேலுமணியும் சண்முகமும் சசிகலாவை சந்தித்து இரண்டு மணி நேரம் பேசியிருக்கிறார்கள்.

‘நீங்க கட்சிக்குள் வாங்க. பொதுக்குழு உறுப்பினர் பொறுப்புகளை எடப்பாடி எடுத்துக்கொண்டே இருக்கிறார். பொதுக்குழுவில் அவருடைய கை ஓங்குவதுபோல செய்கிறார். ஆனால் நாங்கள் மே 4ம் தேதியன்று இருந்த பொதுக்குழுதான் செல்லும் என்று முன் வைக்கப்போகிறோம். அதைவைத்து நாங்கள் முதலில் பொதுக்குழுவை கூட்டவிருக்கிறோம். எங்களிடம் ஏற்கெனவே 2,000 பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கியது இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் கேட்ட சசிகலா, ‘இப்பவாது உங்களுக்கு இந்த யோசனை வந்ததே… தேர்தலுக்கு முன்பே வந்திருந்தால் இன்னும் 20 சீட் ஜெயித்திருக்கலாம்’ என்றவர், ‘இதுகுறித்து தினகரனிடம் பேசினீர்களா? என்று கேட்டிருக்கிறார். ‘உங்களிடம்தான் முதலில் பேசியிருக்கிறோம். நீங்களே அவரிடம் பேசி ஒப்புக்கொள்ள வையுங்கள். நம்மோடு 33 எம்.எல்.ஏக்கள் வந்துவிடுவார்கள்’ என்று கொக்கி போட்டுள்ளனர். அதன்பிறகு ஜெயக்குமாரை ரகசியமாக சந்தித்த வேலுமணி தரப்பு இத்தகவலை சொல்ல, ‘எது எப்படியோ சென்னையில் என்னை ஒதுக்கி வைக்கும் பழனிசாமிக்கு படம் புகட்டுங்கள்’ என்று பட்டும் படாமல் கூறியிருக்கிறார்.

இவ்விவகாரம் எடப்பாடிக்கு தெரியவரவே, அவர் ஷாக்காகி தன் மகன் மிதுனை சசிகலாவை சந்திக்க வைத்திருக்கிறார். அப்போது சசிகலா, ‘தேர்தலுக்கு முன்பு என்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றேன். மூன்று பேருக்கு சீட்டு கொடுங்கள், தென் மாவட்ட தொகுதிகளில் ஜெயிக்கவைக்கிறேன். பா.ம.க. ராமதாஸையும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியையும் அழைத்து வருகிறேன் என்றேன். அப்போது என்னை புறக்கணித்தீர்களே… இப்போது எதற்காக வருகிறீர்கள்? இனியாவது, எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்காதீர்கள்’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி, சென்னை ஈ.சி.ஆரில் உள்ள சண்முகம் வீட்டில் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சுமார் ஐந்து மணி நேரம் ஆலோசனை செய்திருக்கிறார்கள். எடப்பாடி அறிவித்துள்ள ஆகஸ்ட் 14ம் தேதி ஆர்பாட்டத்தில் நாம் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்தனர். அதற்கேற்ப, தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடியும், ‘யாரை நம்பியும் கட்சி இல்லை’ என பேசினார். இதன்மூலம் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர அவர் தயாராக இல்லை என்றே தெரிகிறது.

அதனால் சசிகலாவை அவைத் தலைவராகவும், வேலுமணியை பொதுச்செயலாளராகவும், இணைப் பொதுச்செயலாளராக சண்முகத்தையும், பொருளாளராக நத்தம் விஸ்வநாதனையும் நியமித்து கட்சியைக் கைப்பற்றலாம் என்று ஆலோசனை செய்துவருகிறார்கள். ஏ.பி. ஃபார்மில் வேலுமணி, சண்முகம் ஆகிய இருவரும் கையெழுத்திடுவதாக பைலாவை மாற்றவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இவற்றை எல்லாம் முறியடிக்க வேலுமணி மற்றும் சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள். 15 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவது குறித்தும் எடப்பாடி, வழக்கறிஞர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்? என்று சொல்லி முடித்தார்கள்.

எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் நாம் பேசியபோது, “கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி தான். அவரைச் சுற்றித்தான் இனி தமிழக அரசியலே இருக்கும். சிலர் த.வெ.க. கைக்கூலிகளாக மாறிவிட்டார்கள். ஏற்கெனவே அக்கட்சியில் போய் இணைந்தவர்கள், அரசியல் அனாதைகள் ஆகிவிட்டார்கள். ஆகையால் அங்கேபோய் சேர பயந்து கொண்டு இங்கேயே இருந்துகொண்டு கலகம் செய்கிறார்கள். சண்முகமும் வேலுமணியும் தனித்து விடப் பட்டிருக்கிறார்கள்” என்றார்கள்.

அரசியல் ஆடுபுலி ஆட்டம். இதில், யார் பலியாடு?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *