நம் நாட்டை விட்டுப் போகும் போது, ஆங்கிலேயர், நிலத்தில் பார்த்தீனியத்தையும், நீரில் ஆகாயத் தாமரையையும் விட்டுச் சென்றதாக ஒரு சொல்வழக்கு உள்ளது. காரணம், இவை இரண்டும் மிக விரைவாகப் பரவக் கூடிய களைச் செடிகள்.
அழகான மலர்களுக்காக ஹேஸ்டிங்கிசின் மனைவி மரியன் ஹேஸ்டிங்ஸால் இந்தியாவிற்கு வந்த இந்த ஆகாயத் தாமரை, நம் நாட்டு அழகை எல்லாம் காண முடியாதவாறு செய்து விட்டது.
தமிழ்நாட்டில் உள்ள ஆறு, குளம், ஏரிகளில் எங்கு எப்போது பார்த்தாலும் ஆகாயத் தாமரை மண்டிக் கிடக்கிறது. அதை பார்க்கும் போதெல்லாம் ஏதாவது செய்து, இதைக் கட்டுப்படுத்த முடியாதா என்ற எண்ணம் தோன்றும். அப்படி ஒரு பெண்ணுக்கு தன் சிறு வயதில் உருவான எண்ணம் தற்போது ஆகாயத் தாமரைக் காகிதமாக மாறி ஐ.நா. சபையில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
அந்த பெண்ணுடைய பெயர் “சுஷ்மிதா கிருஷ்ணன்”.
கோயம்புத்தூரில் பிறந்த இவர், 11 வயது இருக்கும்போது, திருச்சி வந்தார். திருவெறும்பூரில் தங்கி இருந்த பொது, அருகே இருந்த பெரியகுளத்தில் மெத்தை போல மண்டிக் கிடந்த ஆகாயத் தாமரையைக் காணும் போதெல்லாம் அதை எப்படி மொத்தமாக அகற்றுவது என்பது குறித்து அடிக்கடி சிந்தித்ததாகக் கூறினார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயிர் அறிவியல் பிரிவில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பயின்றார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில்(IISc, Bengaluru), பயிற்சிக்கு காலத்தில் பூச்சிகள் குறித்து ஆய்வு செய்த போது, ஆகாயத் தாமரையை ஆராயத் துவங்கினார். கல்லூரிப் படிப்பின் 4 ஆவது ஆண்டில் ஐ. நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பின் உதவித்தொகையைப் பெற்று, தொழில் துறை ஆலோசகராகப் (Individual Consultant) பணியாற்றினார்.
TAGe (Talking Across Generations on Education) எனும் யுனெஸ்கோ அமைப்பின் ஒரு உரையாடல் அமைப்பில் ஆய்வுக்குழு உறுப்பினராக இந்தியாவின் சார்பில் உரையாற்றினார்.
இவ்வளவும், கல்லூரியில் இருக்கும் போதே !! அதே யுனெஸ்கோ நடத்திய ஒரு கேம் உருவாகும் போட்டியில் கலந்துகொண்டு, டைவர்சிட்டி(Diversity) எனும் கேமையும் உருவாக்கியுள்ளார். அந்த கேம் நிலையான வளர்ச்சி(Sustainable Development) பற்றியது என்று தெரிவித்தார்.