India
oi-Hema Vandhana
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு டீச்சரின் மரணம், அந்தப் பகுதியையே உலுக்கிப் போட்டிருக்கிறது. 29 வயதான நீலோபர் என்ற தனியார் பள்ளி ஆசிரியை, மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ஆரம்பத்தில் சாதாரண மரணம் என்றுதான் போலீசார் நினைத்தனர்.. ஆனால், விசாரணை நடத்த நடத்த, போலீசாருக்கே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது
நிலோபருக்கும் நயீம் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நிலோபர் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாகக் கூறி, அவரது கணவர் தரப்பினர் அவசர அவசரமாக அடக்கம் செய்தனர்.

தனியார் பள்ளி ஆசிரியை
அப்போதுதான் நயீமுக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகியுள்ள விவரம் நிலோபர் குடும்பத்தினருக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்தனர்.. இதனாலேயே தங்கள் மகளின் மரணம் அமைந்துவிட்டதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.. ஆனால் கணவர் தரப்போ, இதை மறுக்கிறார்கள்.. நிலோபர் தவறுதலாக ஆசிட் குடித்துவிட்டதாகவும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்ததாகவும் அடித்து சொன்னார்கள்..
ஆனாலும் நிலோபரின் அம்மாவும், சகோதரனும் எழுப்பிய குற்றச்சாட்டுகள் அதிகாரிகளை நிலைகுலைய வைத்தன. உயிரிழந்த நீலோபரின் உடல் முழுதும் பெல்ட்டால் தாக்கப்பட்ட தழும்புகளும், அந்தரங்கப் பகுதிகளில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட வடுக்களும் இருந்ததாக அவர்கள் கண்ணீருடன் புகார் சொன்னார்கள்..
உடம்பெல்லாம் நிலோபருக்கு சூடு
ஒரு பெண் இவ்வளவு கொடூரமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பது, இது வெறும் தற்கொலை அல்ல, திட்டமிட்ட படுகொலை என்பதையே உறுதிப்படுத்துகிறது என்று வாதிடுகிறார்கள் குடும்பத்தினர்.. அதுமட்டுமல்ல, திருமணமான 9 ஆண்டுகளில், கணவர் நயீமின் முதல் திருமண வாழ்க்கை குறித்த தகவல்கள் நிலோபருக்கு தெரியவந்ததிலிருந்தே அதிர்ச்சியில் இருந்தாராம்..
முதல் திருமணத்தை மறைத்து ஏன் என்னை திருமணம் செய்தீர்கள் என்றும் ஆதங்கத்துடன் நிலோபர் கணவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்..
அப்போதிருந்தே அவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளன. இந்தத் தகராறுகளின் உச்சகட்டமாகவே நிலோபர், பெல்ட் அடி, உடல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, நிலோபரின் குடும்பத்தினர் போலீசாரிடம் முறையிட்டுள்ளனர்.
தோண்டி எடுக்கப்பட்ட உடல்
குடும்பத்தினர் முன்வைத்த இந்த தொடர் புகார்களையடுத்து,மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், அடக்கம் செய்யப்பட்ட நீலோபரின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
இப்போது 4 டாக்டர்கள் கொண்ட தடயவியல் நிபுணர் குழு, போஸ்ட் மார்ட்டம் மேற்கொண்டு வருகிறது. பிரேத பரிசோதனையின் முடிவுகள், நிலோபரின் மரணத்திற்குப் பின்னால் இருந்த உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காட்டும் என்று உறுதியாக நம்பப்படுகிறது..
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
சம்பவம் நடந்தபோது நிலோபர் உயிருடன்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அப்போது போலீசாரும் வாக்குமூலம் பெற முயற்சித்திருக்கிறார்கள்.. ஆனால், அவர் பேச முடியாத நிலையில் இருந்ததால் உண்மை அறிய முடியாமல் போனது. இப்போது, தோண்டி எடுக்கப்பட்ட பிரேத பரிசோதனை முடிவுகளே இந்த வழக்கின் போக்கை மாற்றப்போகும் முக்கிய ஆதாரமாக உள்ளது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர குமார் சிர்சத், இது குறித்து செய்தியாளர்களிடம் சொல்லும்போது, இயற்கைக்கு மாறான மரணம் என்றுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. இப்போது பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் உறவினர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

