ஆசியக் கோப்பையை தட்டித்தூக்கிய இந்தியா… வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்! – Kumudam

Spread the love

துபாயில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசிய கோப்பை 2026 தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, வெற்றி பெற்ற இந்திய அணிக்கு நாடு முழுவதும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தனது 8வது ஆசிய கோப்பை பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. மேலும், தொடர் முழுவதும் ஒரு போட்டியில்கூட தோல்வியடையாமல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் இந்த வெற்றிக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்தது.

ஷஃபாலி வர்மா 39 பந்துகளில் 68 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 59 ரன்களும் குவித்தனர். இறுதிக்கட்டத்தில் பாரதி புல்மாலியின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் இமேஷா துலானியை முதல் ஓவரிலேயே கிராந்தி கௌட் ஆட்டமிழக்கச் செய்து இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.

அதன்பின்னர் சிறப்பாக பந்துவீசிய ஸ்ரீ சரணி, 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா, 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்திய மகளிர் அணியின் இந்த மகத்தான வெற்றியைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்திய கிரிக்கெட்டுக்கு இது ஒரு பெருமையான தருணம். தொடர் முழுவதும் இந்திய மகளிர் அணியின் தன்னம்பிக்கை, நிலைத்தன்மை மற்றும் விளையாட்டுத்திறன் வெளிப்பட்டது. இந்த வெற்றி நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க பெரும் ஊக்கமாக அமையும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் தளப் பதிவில், “மகளிர் டி20 ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தொடர் முழுவதும் தோல்வியடையாமல் விளையாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பாக நாட்டின் மகள்களுக்கு இவர்கள் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்கள்,” என பாராட்டியுள்ளார். பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்ட பல தலைவர்களும் இந்திய அணியின் இந்த சாதனைக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *