மும்பையில் பலத்த மழைக்கு இடையே தொடங்கிய விநாயகர் சதுர்த்தி விழா; பாதுகாப்பில் 16,000 போலீஸார்

Spread the love

மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 முதல் 12 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த விழாவைக் காண வெளிநாட்டுப் பக்தர்கள் உட்பட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் மும்பைக்கு வருவது வழக்கம்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமரிசையாகத் தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விநாயகர் சிலைகளை பந்தல்களுக்கு எடுத்துச்சென்று பிரதிஷ்டை செய்வதில் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

இன்று அதிகாலையில் இருந்து மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் விநாயகர் சிலைகளை மேளதாளங்கள், ஆடல் பாடலுடன் தங்களது இடங்களுக்கு எடுத்துச்சென்று பிரதிஷ்டை செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகப் பெருமானை நகரம் முழுவதும் உள்ள வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பொது பந்தல்களுக்குள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று பிரதிஷ்டை செய்தனர்.

பல முக்கிய கணேஷ் மண்டலங்கள், வீட்டிலிருந்து பிரார்த்தனை செய்ய விரும்பும் பக்தர்களுக்காக, 24×7 நேரலை தரிசன வசதியைக்கூட ஏற்பாடு செய்து இருக்கின்றன. இன்று தொடங்கி, 25ம் தேதி முடியும் இந்த விழாவின் அனைத்து நாட்களிலும் மும்பை முழுக்க கணபதி பப்பா மோரியா என்ற கோஷங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

இன்று அதிகாலையில் இருந்தே, ‘கணபதி பாப்பா மோரியா’ என்ற கோஷங்கள் நகரின் பல பகுதிகளில் எதிரொலித்தது.

மும்பையில் விநாயகர் சதுர்த்தி என்றாலே லால்பாக் ராஜா கணபதிதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இந்தக் கணபதியை ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் தரிசிப்பது வழக்கம். இன்று அதிகாலை முதல் தரிசனத்தைக் காண பக்தர்கள் லால்பாக் ராஜா மண்டலில் நேற்றிலிருந்தே வரிசையில் காத்து இருந்தனர்.

இந்த ஆண்டு லால்பாக் ராஜா தனது 93வது ஆண்டைக் கொண்டாடுகிறது. அருகிலுள்ள, கணேஷ் கல்லியில் உள்ள மும்பைச்சா ராஜா, 22 அடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சியளித்தது.

மும்பையின் முக்கிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கணேஷ் மண்டலங்களில் ஒன்றான சிஞ்ச்போக்ளிச்சா சிந்தாமணி, அதன் 107வது ஆண்டைக் கொண்டாடுகிறது. முதல் நாளான இன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சின்ச்போக்லி ரயில் நிலையம் அருகே உள்ள அதன் பந்தலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகரைத் தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர்.

இது தவிர மாட்டுங்காவில் உள்ள ஜிஎஸ்பி சேவா மண்டல் மற்றும் அந்தேரிச்சா ராஜா உள்ளிட்ட முக்கிய மண்டலங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

ஜி.எஸ்.பி சேவா மண்டலில் விநாயகர் சிலை 5 நாட்கள் மட்டுமே இருக்கும். அதன் பிறகு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுவது வழக்கம். எனவே 5 நாட்களும் இந்த மண்டலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருவிழா நடைபெறும் 12 நாட்களும் முக்கிய பந்தல்களில் பெரும் கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மும்பை முழுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முக்கிய இடங்களில் போலீஸார், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர 37 துணை போலீஸ் கமிஷனர்கள் மற்றும் 52 உதவி போலீஸ் கமிஷனர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி தனது மருமகளுடன் சென்று விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து வீட்டில் பிரதிஷ்டை செய்துள்ளார்.

இதே போன்று பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி உட்பட பாலிவுட் பிரபலங்களும் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *