ஒட்டுமொத்த இந்தியாவுமே தமிழ்நாட்டின் அரசியல் நகர்வுகளை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலத்தின் தற்போதைய நிலைதான் அதற்குக் காரணம்!
திமுக Vs அதிமுக என்றிருந்த களம், தவெக என்ற கட்சியின் வரவால்… எக்குத்தப்பாக மாறிக் கிடக்கிறது. சந்தித்த முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தவெக-வால் ஆட்சியமைக்க முடியாமல் இருக்கவே… நொடிக்கு நொடி மாறும் `கா(க)ட்சிகளுடன் களேபரக் காடாக தகித்துக் கொண்டிருக்கிறது `தமிழ்நாடு!”

தற்போதைய சூழலில், 2016-ல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அரங்கேறிய அரசியல் சம்பவங்கள் நமக்கு நிச்சயம் நிழலாடும். 2017-ல் அதிமுக-வில் நடைபெற்ற அதிகார யுத்தத்திலும், அரியணைப் போட்டியிலும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, `ஆளுநர்’ மூலம் நடத்தியதையெல்லாம் நாடறியும்!
2016 டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா மறைந்ததாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள், நிர்வாகத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவால் பதவியேற்பு செய்து வைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, 2017-ல் ஓ.பி.எஸ்., – சசிகலா இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டபோது, கட்சிக்குள் சசிகலாவுக்கு ஆதரவாக அனைத்தும் இருந்தும், சசிகலாவை முதலமைச்சராக பதவியேற்க ஆளுநர் உடனடியாக அழைக்கவில்லை. இதற்கான காரணமாக, அவருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை காத்திருந்ததும், மாநில அரசியல் நிலைத்தன்மையை மதிப்பீடு செய்ததும் கூறப்பட்டது.

பின்னர் 2017 பிப்ரவரி 14-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் சசிகலாவை குற்றவாளியாக அறிவித்தது. இதன் காரணமாக அவர் முதலமைச்சராக முடியாத நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சசிகலாவால் முன்மொழியப்பட்ட எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார், ஆளுநர். மேலும், 15 நாள்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு பழனிசாமிக்கு உத்தரவிடப்பட்டது. பிப்ரவரி 18-ம் தேதியன்று, பழனிசாமியும் அப்படியே செய்து, முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். அந்தச் சமயத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
`பாஜக இந்தியாவின் பிற மாநிலங்களில் செய்ததை, நம் மாநிலத்தில் செய்ய முயன்ற டாஸ்க்கே… ஆளுநரை வைத்து ஆடிய பொம்மலாட்டம்’ என அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த நேரத்தில் விகடன் வெளியிட்டிருந்த கார்ட்டூன், சூழ்நிலையைக் கண்ணாடிபோல பிரதிபலிப்பதாக இருந்தது.

2017-ல் தமிழ்நாடு எதிர்கொண்ட அதே நிலை மீண்டும் ரிப்பீட்டாகிறது! அன்று அதிமுக-வுக்குள் ஆளுநரால் நடந்தது, இன்று `திமுக – அதிமுக – ஆளுநர்’ என்ற முக்கோண ரீதியில் நடக்கிறதா என்கிற கேள்வி, அரசியல் அரங்கில் எழுகிறது!
108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தவெக-வுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல், ஆளுநர் நகர்த்தும் பவர் கேம், திமுக – அதிமுக-வை சூழலில் சுற்ற விட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே ஆளுநரின் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.