உடந்தையாக செயல்பட்ட பெண் டாக்டர்
இவர்களின் மோசடிக்கு மேற்கு டெல்லியில் உள்ள ஹீரா மருத்துவமனை முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளது. குழந்தைகளை ஏழைகளிடமிருந்து வாங்கிக்கொண்டு வந்து அதனை மறுவிற்பனை செய்யும் வரை இந்த மருத்துவமனையில்தான் வைத்து பராமரித்துள்ளனர். அதோடு அந்த மருத்துவமனையின் டாக்டர் விவேகி குழந்தைகளை விற்பனை செய்ய தேவையான போலி ஆவணங்களை தயாரிப்பது, பிறப்பு சான்றிதழ் போன்றவற்றிற்கு உதவி செய்துள்ளார்.
அதாவது அந்த குழந்தை தங்களது மருத்துவமனையில் பிறந்ததாக காட்டி இருக்கிறார். இது குறித்து போலீஸ் அதிகாரி ரோஹித் சிங் கூறுகையில்,”‘ஹீரா மருத்துவமனையில் தான் குழந்தை விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது. டாக்டர் விவேகி இதில் குழந்தையை வாங்குபவர் மற்றும் கடத்தல்காரர்களிடையே இடைத்தரகராக இருந்து செயல்பட்டுள்ளார்” என்றார். கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், குஜராத்தின் சபர்கந்தா பகுதியைச் சேர்ந்த சபபாய் கமரை (எ) காலியாவை போலீஸார் கைது செய்தனர்.
ராஜஸ்தானின் பாலி மற்றும் குஜராத்தின் சபர்கந்தா ஆகிய பகுதிகளில் ஏழ்மை நிலையில் உள்ள தம்பதியிடமிருந்து பச்சிளம் குழந்தைகளை ‘விலைக்கு வாங்கி’, டெல்லியில் உள்ள டாக்டர் விவேகியின் மருத்துவமனை வழியாகக் குழந்தையில்லாத தம்பதியினருக்கு விற்பனை செய்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளின் பெற்றோரைத் தொடர்புகொண்டு, அவர்கள் குழந்தைகளைத் தாங்களாகவே விருப்பத்துடன் விற்றார்களா, கட்டாயத்தின் பேரில் விற்றார்களா அல்லது குழந்தைகள் கடத்தப்பட்டார்களா என்பதை அறிய போலீஸார் முயற்சித்து வருகின்றனர்.
கடத்தல்காரர்களிடம் அக்குடும்பங்கள் தாங்களாகவே முன்வந்து குழந்தைகளை விற்றிருந்தால், அவர்களும் இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படுவார்கள் என்று துணை ஆணையர் சிங் தெரிவித்துள்ளார். இக்கும்பல் ஒரு தம்பதியிடம் இரட்டையர்கள் என்று கூறி வெவ்வேறு பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளை ரூ.9 லட்சத்திற்கு விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது.