ஆந்திரா: கொரோனாவுக்கு 4 பேர் பலி; பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்; முழு விவரம்

Spread the love

ஆந்திராவில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நான்கு நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகப் பாதிப்பு மற்றும் பிற நாள்பட்ட கடுமையான உடல்நலக் கோளாறுகள் இருந்ததாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் மூன்று பேர் கடப்பா மாவட்டத்தையும், ஒருவர் காகினாடா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து ஆந்திரா அரசின் சுகாதாரத்துறை செயலாளரும், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஆணையருமான ஜி. வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 16 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தில் மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா
ஆந்திரா

இந்த ஆண்டின் முதல் கொரோனா பாதிப்பு கடந்த ஜூன் 26 அன்று கடப்பா மாவட்டத்தில் பதிவானது. அதைத் தொடர்ந்து ஜூலை 1 முதல் 16 வரை மேலும் 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் இரண்டு பேர் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.

ஒட்டுமொத்த பாதிப்பில், கடப்பா மாவட்டத்தில் அதிகபட்சமாக 8 வழக்குகள் பதிவாகியுள்ளன. குண்டூரில் இரண்டும், விசாகப்பட்டினம் மற்றும் காகினாடா மாவட்டங்களில் தலா ஒரு வழக்கும் பதிவாகியுள்ளன. இந்தப் பாதிப்புகள் வெவ்வேறு மண்டலங்கள் மற்றும் பகுதிகளில் பதிவாகியுள்ளதால், இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பரவவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஜூன் 26 முதல் ஜூலை 15 வரை 67 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 11 பேருக்கு தொற்று உறுதியானது. இதுதவிர, காகினாடா மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொருவருக்கு தமிழ்நாட்டின் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வைரஸின் மரபணு வகையைக் கண்டறிவதற்காக 5 மாதிரிகள் கடந்த ஜூலை 9 அன்று புனேயில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

கொரோனா
கொரோனா

தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் தீவிர கண்காணிப்பில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *