ஆபத்தில் இந்திய பொருளாதாரம்? எச்சரிக்கை மணி அடித்த பொருளாதார வல்லுநர்! பாய்ந்து வந்த பாஜக | Economist Subhash Garg Questions about India’s 7.8% GDP Growth claim; BJP Amit Malviya Hits Back

Spread the love

Business

oi-Vigneshkumar

டெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.8% வளர்ந்துள்ளதாக மத்திய அரசு கூறியிருக்கிறது. இது தொடர்பாக பிரதமர் மோடியும் பெருமிதம் தெரிவித்திருந்தார். இருப்பினும், வெறுமன நம்பரை பார்த்து இந்திய பொருளாதாரம் மிக சிறப்பாக இருக்கிறது என நாம் சொல்லிவிட முடியாது என்கிறார் பொருளாதார வல்லுநர் சுபாஷ் கார்க்.

2026-27ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.8% வளர்ச்சி அடைந்திருப்பது நல்ல வளர்ச்சி போல தெரிந்தாலும், இதில் பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும் என்கிறார் முன்னாள் நிதித்துறை செயலாளரும் பொருளாதார வல்லுநரான சுபாஷ் கார்க்! குறிப்பாக, கடந்த ஆண்டுக்கான ஜிடிபி புள்ளிவிவரங்களில் செய்யப்பட்டுள்ள மிக பெரிய மாற்றம், நுகர்வு குறித்த டேட்டாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவை கவனிக்கப்பட வேண்டியவை என அவர் தெரிவித்துள்ளார்.

Economist Subhash Garg Indian economy

கவனிக்க வேண்டியவை

தற்போதைய 7.8% வளர்ச்சி விகிதத்தைப் புரிந்து கொள்ள, அதற்கு முந்தைய ஆண்டின் ஜிடிபி நம்பரை நாம் பார்க்க வேண்டும் என்பது கார்க் முன்வைக்கும் முக்கிய வாதமாகும். கடந்த ஆண்டின் ஜிடிபி வளர்ச்சி தற்போது 6.9%ஆக குறைத்து திருத்தப்பட்டுள்ளது. மேலும், current pricesல் கணக்கிடப்பட்ட ஜிடிபியில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கார்க் கூறுகிறார்.

முன்பு, கடந்த ஆண்டு முதல் காலாண்டின் ஜிடிபி சுமார் ரூ.86 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அது சுமார் ரூ.80 லட்சம் கோடியாக திருத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டின் அடிப்படை நம்பர் குறைந்துள்ளது. அந்த குறைந்த நம்பரில் இருந்து இந்தாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சியை கணக்கிடும்போது, வளர்ச்சி விகிதம் இயல்பாகவே அதிகமாக இருப்பது போல தெரியும் என கார்க் கூறுகிறார்.

வேறுபடுத்தி பார்க்க வேண்டும்

ஜிடிபியை மதிப்பிடும்போது இரண்டு முக்கிய அம்சங்களை வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்பதையும் கார்க் சுட்டிக்காட்டுகிறார். ஒன்று ரியல் ஜிடிபி. இது பணவீக்கத்தின் தாக்கத்தை நீக்கி பொருளாதாரத்தில் ஏற்பட்ட உண்மையான வளர்ச்சியை காட்டுகிறது. மற்றொன்று Current Price அல்லது நாமினல் ஜிடிபி. இது பொருட்கள் மற்றும் சர்வீஸின் தற்போதைய ரூபாய் மதிப்பை பிரதிபலிக்கிறது.

கடந்த ஆண்டின் நாமினல் ஜிடிபி பெரிய அளவில் திருத்தப்பட்டுள்ள நிலையில், அதுவே வளர்ச்சி அதிகமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த மாற்றம் ஏன் செய்யப்பட்டது என்பது குறித்தும் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளதாக கார்க் தெரிவித்துள்ளார். இப்போது செய்யப்பட்டது போல கடந்தாண்டு ஜிடிபியில் மாற்றம் செய்யப்படாமல் கணக்கிட்டிருந்தால், நடப்பு ஆண்டின் நாமினல் ஜிடிபி வளர்ச்சி மிகவும் பலவீனமாகத் தெரிந்திருக்கும்.

துறை ரீதியான டேட்டா

வேளாண் மற்றும் சுரங்க துறைகள் சிறப்பாக செயல்பட்டிருப்பதை கார்க் ஒப்புக்கொள்கிறார். ஆனால், அரசு முன்பு வெளியிட்ட டேட்டாவுடன் ஒப்பிடும்போது உற்பத்தி துறை செயல்பாடு பலவீனமாகத் தெரிகிறது என அவர் கூறுகிறார். அதே நேரத்தில், அரசின் முதலீடுகள் குறித்து அவருக்கு பெரிய கவலை இல்லை. அரசின் மூலதன செலவு உண்மையாகவே அதிகரித்து வருவதாக அவர் கருதுகிறார். , முந்தைய ஆண்டின் ஒப்பிடும்போது மூலதன செலவை வளர்ச்சி 15%-க்கும் அதிகமாக உள்ளது. எனவே, அதில் பிரச்சினை இல்லை.

ஆனால், தனிநபர் மற்றும் குடும்ப நுகர்வு குறித்த டேட்டாவே கவலையளிப்பதாக கூறுகிறார் கார்க். குடும்பங்களின் நுகர்வு குறித்த அரசின் முந்தைய டேட்டா தற்போது கணிசமாக குறைத்து திருத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதுபோல குறைக்கப்படாமல் முன்பு வெளியிட்ட டேட்டாவுடனேயே நுகர்வை கணக்கிட்டு இருந்தால் வளர்ச்சி உண்மையில் எதிர்மறையாகக்கூட இருக்கலாம் என்கிறார்!

கேள்விகள்

இதுதான் நமது பொருளாதாரத்தின் அடிப்படை வலிமை குறித்து முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. அதாவது இந்தியாவின் பொருளாதாரம் உண்மையிலேயே வலுவாக வளர்கிறதா? அல்லது 7.8% என்பது வெறும் ஹெட்லைன் நம்பராக மட்டும் நமக்கு காட்டப்பட்டு பொருளாதாரம் மோசமாக இருக்கிறதா என்பதே அந்த கேள்வியாகும்.

ஜிடிபி வளர்ச்சி 7.8% என்ற எண்ணிக்கையை மட்டுமே முன்னிலைப்படுத்தாமல், அதற்கு பின்னால் இருக்கும் மாற்றங்களையும் அரசு கவனிக்க வேண்டும் என்பதையே கார்க் கூறுகிறார். மேலும், கடந்தாண்டின் ஜிடிபி இந்தளவுக்கு திருத்தப்பட்டது ஏன் என கேள்வி எழுப்புகிறார். உற்பத்தி துறை பலவீனமாக இருப்பது குறித்தும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என சொல்லும் அவர், வெறுமன நம்பரை மட்டும் பார்க்காமல் பொருளாதாரத்தில் இருக்கும் உண்மையில் இருக்கும் பலவீனங்களை சரிசெய்ய தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

பாஜக பதிலடி

இருப்பினும் கார்கின் இந்த கருத்துகளை பாஜகவின் அமித் மால்வியா கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “நிதியமைச்சகத்தில் இருந்து நீக்கப்பட்டதிலிருந்து, சுபாஷ் சந்திர கார்க் இந்திய பொருளாதாரம் குறித்து தொடர்ந்து அவநம்பிக்கையான கருத்துகளை கூறி வருகிறார். இந்திய பொருளாதாரம் 2.6% மட்டுமே வளர்ந்திருப்பதாக அவர் சொல்லியிருப்பது அவரது மதிப்பீடுகளை எந்த அளவுக்கு எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்பதையே நினைவூட்டுகிறது. 7.8% என்பது உண்மையான பொருளாதார வளர்ச்சி. அதில் ஏற்கனவே பணவீக்கத்தின் தாக்கம் நீக்கப்பட்டுவிட்டது. அதிலிருந்து மீண்டும் 5-6% பணவீக்கத்தை கழிப்பது முதல் தவறாகும்.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் லாபம் 16% உயர்வு, வாகன விற்பனை 19.1% உயர்வு, டிராக்டர் விற்பனை 28.1% உயர்வு, மொத்த டெபாசிட்கள் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 30.7 பில்லியன் டாலர் உயர்வு, ஜூலை மாத வளர்ச்சி 6.7%, உற்பத்தித் துறை வளர்ச்சி 7.3%, மூலதன பொருட்கள் வளர்ச்சி 16.1% மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு 729.33 பில்லியன் டாலராக உயர்ந்தது என பல விஷயங்கள் பொருளாதாரம் வேகமாக வளர்வதையே காட்டுகிறது. இந்தியாவுக்கு உண்மையான சவால்கள் உள்ளன. அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அவை நேர்மையாக விவாதிக்கப்பட வேண்டும். ஆனால், இதுபோல அவதூறு பரப்ப கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *