‘ஆபரேஷன் சிந்தூர்’ மோதலில் வீரமரணம்: வீரர்களின் பெயர் வெளியீடு! – Kumudam

Spread the love

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7-ஆம் தேதி இந்திய ராணுவமும் விமானப்படையும் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதலை மேற்கொண்டன.

இதனைத் தொடர்ந்து, எல்லைப்பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் 11 பொதுமக்கள் உயிரிழந்தனர். இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவிய நிலையில், இரண்டு நாட்கள் நீடித்த மோதலுக்குப் பிறகு மே 9-ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.

இந்த மோதலின்போது 6 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியான போதிலும், அதுகுறித்து மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில், தேசிய போர் நினைவுச்சின்னத்தில் உள்ள ‘தியாகச் சக்கரத்தில்’ அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டதன் மூலம், வீரமரணம் அடைந்த வீரர்களின் விவரங்கள் முதன்முறையாக வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த ஆயிரக்கணக்கான வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அந்த 6 வீரர்கள்:
•    சுபேதார் மேஜர் பவண்குமார்
•    சுனில் குமார் (வீர் சக்ரா விருது பெற்றவர்)
•    லான்ஸ் நாயக் தினேஷ் குமார்
•    முரளிநாயக்
•    ஹவில்தார் சுனில் குமார் சிங்
•    சர்ஜென்ட் சுரேந்திர குமார் (வாயு சேனா பதக்கம் பெற்றவர்)
நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்தியாகம் செய்த இந்த வீரர்களுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *