கேரள மாநிலத்தில் ஆபரேஷன் தூஃபான் திட்டத்தின் கீழ் போதைப்பொருள்களுக்கு எதிரான வேட்டை தொடர்ந்து நடந்துவருகிறது. அதன் ஒருபகுதியாக எர்ணாகுளம் மாவட்டம், மாறம்பிள்ளி குன்னுவழிப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில், பைக்கில் கடத்தப்பட்ட 1.166 கிலோ கிராம் ஹைபிரிட் கஞ்சாவுடன் ஆயுஷ் (39) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் வசித்த ஃபிளாட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் மேலும் 16 கிலோ ஹைபிரிட் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய அவரின் மனைவி அனிகா (30) கைதுசெய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட ஹைபிரிட் கஞ்சா மிகவும் வீரியமிக்கது எனவும், சர்வதேச அளவில் அதன் மதிப்பு 18 கோடி ரூபாய் எனவும் போலீஸார் கண்டறிந்தனர். எர்ணாகுளம் ரூரல் மாவட்டத்தில் சமீபத்தில் பிடிக்கப்பட்ட அதிக மதிப்புகொண்ட போதைப்பொருள் இதுதான் என போலீஸார் தெரிவித்தனர். மேலும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கை முழுமையாக கண்டுபிடிக்கும் விதமாக எர்ணாகுளம் ரேஞ்ச் டி.ஐ.ஜி யதீஷ் சந்திராவின் மேற்பார்வையில், ரூரல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சுதர்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படையில் பெரும்பாவூர் ஏ.எஸ்.பி ஹர்திக் மீனா மற்றும் இன்ஸ்பெக்டர்களும், சப் இன்ஸ்பெக்டர்களும் இடம்பெற்றிருந்தனர். தனிப்படை விசாரணை நடத்தி இந்த கும்பலைச் சேர்ந்த பாலக்காடு முண்டூர் புதனூர் பள்ளிப்பறம்பில் பகுதியைச் சேர்ந்த அபு தாஹிர் (39), ஒற்றப்பாலம் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (25), பாலக்காடு கடம்பழிப்புறம் அத்தாணிப்பறம்பில் பகுதியைச் சேர்ந்த பிரஜித் (40), ஸ்ரீஜேஷ் (41) மற்றும் சஞ்சய் (22) ஆகியோரைக் கைதுசெய்தனர்.

இது பற்றி போலீஸார் கூறுகையில், “இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் செயல்படும் போதைப்பொருள் விநியோக நெட்வொர்க்கை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து இந்தகுற்றவாளிகள் சிக்கியுள்ளனர். இவர்கள் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்கள் வழியாகக் கேரளாவுக்கு ஹைபிரிட் கஞ்சா கடத்தி வரும் சர்வதேச போதைப்பொருள் கும்பலின் உயர் மட்டத் தலைவர்கள் ஆவார்கள். போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கின் முக்கிய குற்றவாளியான அபு தாஹிரை பெங்களூரில் வைத்து கைதுசெய்துள்ளோம். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மொபைல் போன்கள், வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள், வெளிநாட்டுப் பயண ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.