
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி மே 4ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைக்கும் என, என்.டி.டி.வி., பீப்பிள்ஸ் பல்ஸ், ரிபப்ளிக்- பி மார்க், மேட்ரிஸ், சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ், எஸ்.ஏ.எஸ்., குரூப், அக்னி, மின்னம்பலம், ரெட் பேரட் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்டாலின் அவசர ஆலோசனை
எக்ஸிட் போல் முடிவுகள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்ததைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக அமைச்சர்கள், திமுக தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எ.வ.வேலு, பெரிய கருப்பன் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தேர்தல் வியூக வகுப்பாளர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசினர்.
எக்ஸிட் போல் தரவுகளின் அடிப்படையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதியன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் சரியாகப் பதிவாகியுள்ளனவா என்பது குறித்து இந்த ஆலோசனையில் தீவிரமாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
வேட்பாளர்களுக்கு விஜய் அட்வைஸ்
இன்றைய தினம் மதியம் 2 மணியளவில் பனையூர் தலைமை அலுவலகத்திற்கு தவெக வேட்பாளர்கள் 232 பேரும் வர வேண்டும் உத்தரவு போடப்பட்டு இருந்தது. அதுமட்டுமின்றி 17சி படிவத்தையும் எடுத்த வரவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை ஏற்று தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பனையூரில் மதியம் 1 மணிக்கு ஆஜராகினர்.
அவர்களிடம் வாக்கு எண்ணிக்கையின் போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டுள்ள பூத் ஏஜெண்ட்கள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாக்கு எண்ணும் மையத்தில் இருக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே காத்து இருக்க வேண்டும். வெற்றி பெறும் வேட்பாளர்கள் சான்றிதழை பெற்றுக் கொண்டு வேறு எங்கும் சொல்லக்கூடாது. நேராக பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும் உள்பட பல உத்தரவுகளை விஜய் பிறத்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைதி காக்கும் அதிமுக
வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி எங்கும் வெளியில் வர வில்லை. வாக்குபதிவு முடிந்த 2 நாட்கள் குறித்தே பூத் ஏஜெண்ட்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். கருத்துக்கணிப்பு தொடர்பாகவும் எந்த கருத்தையும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பழனி, திருச்செந்தூர் என கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். தேர்தலுக்கு பிறகு கருத்துக்கணிப்புகளால் எடப்பாடி அப்செட்டில் இருப்பதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.