ஆளவந்தான் : பூவுக்குப் பதிலாக தலை விழுந்திருந்தால்? | `சினி’ஸ்கோப் 01 | ஆதி தாமிரா | A cinema series on classic Cinema part 1 Alavanthan

Spread the love

விஜயும், நந்துவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கிறார்கள். நந்துவிடம் கடைசி வரை ஒரு கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது.

பூவுக்குப் பதிலாக தலை விழுந்திருந்தால்?

அம்மாவை இழந்த நிலையில், ஒரு மோசமான பெண்ணின் பிடியில் சிக்கியிருக்கும் அப்பாவிடமிருந்து தப்பி, மாமாவிடம் வளர ஒரு வாய்ப்பு கிடைக்கிறது, சிறுவர்களாக இருக்கும் நந்துவுக்கும், விஜய்க்கும்! ஆனால், ஒருவர்தான் செல்ல முடியும். யாருக்கு அந்த வாய்ப்பு என்பதை இருவரும் ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டு முடிவு செய்கிறார்கள். விஜய்க்குச் சாதகமாக பூ விழுகிறது. ஏனப்படி என்பதற்கான பதிலைத்தான் காலமெல்லாம் நந்து தேடிக்கொண்டிருக்கிறான்.

தன் தகப்பன், சித்தியில் வலையில் வீழ்ந்ததைப் போன்றே, இன்னொரு பெண்ணின் வலையில் தன் சகோதரனும் விழுந்துவிட்டான், அவனைக் காப்பது தன் கடமை என்ற முடிவுக்குப் போகிறான். இல்யூஷன் (Illusion) என்பது தோற்றப்பிழை. காட்சியையோ, ஒலியையோ மாற்றிப் புரிந்துகொள்வது.

இருளில் ஆடும் ஒரு துணி, ஒளிந்திருக்கும் மனிதராகத் தோற்றம் தருவது. ஸ்கிசோஃப்ரினியா நோயாளிகளின் பிரச்சினை டெல்யூஷன் (Delusion). ஒளிந்திருக்கும் மனிதனின் தோற்றத்தை அவர்கள் காண எந்தத் துணியும் தேவையில்லை. அது பூரண மாயை! விஜயைத் தேஜுவிடமிருந்து காப்பாற்ற மருத்துவச்சிறையிலிருந்து தப்புகிறான் நந்து. அந்த நந்துவிடமிருந்து தேஜுவைக் காப்பாற்றினானா விஜய் என்பது படத்தின் முடிவு.

ஆளவந்தான்

ஆளவந்தான்

நந்துவின் மனநலப் பாதிப்புக்குப் போதுமான காரணங்கள் படத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனாலும், இத்தனைத் தீவிரமான வன்முறை எங்கிருந்து அவனுக்கு வந்திருக்கும் என்ற கேள்விக்கு ஒரு பேட்டியில் கமல்ஹாசன், ’காமிக்ஸிலிருந்து கூட வந்திருக்கலாம்’ எனும் பதிலைத் தருகிறார்.

அந்த இருவருமே சிறுவர்களாக இருக்கையில் காமிக்ஸ் படிக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த வீட்டின் சுவரில் ஃபேண்டம் (phantom) காமிக்ஸ் கதாபாத்திரத்தின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். விஜயைச் சுடராகவும், நந்துவைச் சூறாவளியாகவும் உருவகித்து அப்படியே அழைக்கவும் கூடிய மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பழங்குடியின ஆள் அவர்களின் சிறுவயது நண்பனாக, அவர்கள் வாழ்க்கையின் ஆறுதலாக வருகிறான்.

நந்து அவனது டைரியோடு பேசுகிறான், வாழ்கிறான், அவனது உயிரே அதில்தான் இருப்பதாக உருவகம் கொள்கிறான். இப்படி நுணுக்கமான காட்சியமைப்புகள் படம் நெடுகக் கவனமாக அமைக்கப்பட்டிருந்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *