Tamilnadu
oi-Vishnupriya R
ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அருகே பள்ளி மாணவன் ஒருவர் வாட்ஸ்- அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் செங்காடு கிராமம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் – சாமுண்டீஸ்வரி தம்பதியரின் ஒரே மகன் தினேஷ் (16).

இவர் ஒழுகூர் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தனது கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
இந்த விழாவில் பள்ளி சீருடை அணிந்தபடி தினேஷ் நடனமாடியதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த அவரது தாய் சாமுண்டீஸ்வரி, பள்ளி சீருடையில் நடனம் ஆடுவது கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த தினேஷ், வீட்டின் பின்புறம் உள்ள விவசாய நிலத்திற்கு செல்லும் உயர்மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தற்கொலைக்கு முன்பு தனது செல்போனில் செல்ஃபி எடுத்து அதனை வாட்ஸ்- அப் ஸ்டேட்டஸாக பதிவேற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை செல்போன் ஸ்டேட்டஸில் பார்த்த சக நண்பர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த பெற்றோர் பதறியடித்துக் கொண்டு அந்த விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது அங்கிருந்த உயர்மின் கோபுரத்தில் தினேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது கண்டு கதறி அழுதனர்.
பின்னர் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து தகவலறிந்த வாலாஜாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி பள்ளி மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் வந்தால் ‘104’எண்ணை அழைத்து பேச வேண்டும். மரணம் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வல்ல.