`ஆளுநரே பல்கலைகக்கழகங்களின் வேந்தரா? 'பாஜக-வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சி' – பொன்முடி சாடல்

Spread the love

தமிழ்நாட்டின் தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று, “முதலமைச்சரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாடு முந்தைய அரசினுடையது. எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு கொள்கை முடிவுகளை முதலமைச்சர் எடுப்பார். கடந்த அரசின் முறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு கிடையாது” என்று பேசியிருந்தார்.

விஸ்வநாதனின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்…

ராகுல் காந்தி - மேலூர் விஸ்வநாதன்
ராகுல் காந்தி – மேலூர் விஸ்வநாதன்

“தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வடிவினை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கழக ஆட்சியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம்., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பாஜக அல்லாத அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு,

அச்சட்டம் ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, அச்சட்டமுன் வடிவுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், புதியதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் உயர்கல்வித் துறை அமைச்சரும் – காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான திரு.விஸ்வநாதன் “ஆளுநரே பல்கலைக் கழக வேந்தராக நீடிக்கலாம்” என்று கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். மேலும் இது மாநில உரிமைகளுக்கு எதிரானது ஆகும்.

’ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரே பல்கலைக் கழக வேந்தராக தொடரலாம்‘ என்று பா.ஜ.க.வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதனின் கருத்து பாஜக அரசின் அடிவருடியாக காங்கிரஸ் மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இச்சட்டம் நிறைவேறுவதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே இன்றைக்கு அதற்கு எதிராக பேசுவது என்பது பதவி சுகத்துக்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது. இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கடுமையாக கண்டிக்கிறேன்”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *