“ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" – மாணிக்கம் தாக்கூர்

Spread the love

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.

118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் இருந்து விலகி 5 இடங்களை வென்ற காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கிறது.

இன்னும் ஆறு இடங்கள் தேவை என்பதால் த.வெ.க சிக்கலில் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் த.வெ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி வருகின்றன.

இதனிடையே த.வெ.க தலைவர் விஜய் நேற்று (மே. 6) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார்.

 ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையோடு வாருங்கள் என ஆளுநர் அனுப்பி வைத்த நிலையில் இன்று நடைபெற இருந்த த.வெ.க தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா ரத்தானது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், “தமிழக மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மக்கள் ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர், அதன் மூலம் தமிழக வெற்றி கழகம் உருவெடுத்துள்ளது. நிலைமை மிகவும் தெளிவாக உள்ளது.

அந்தப் கட்சியிலிருந்து 108 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்களின் ஆதரவுடன் மொத்த எண்ணிக்கை 113 ஆக உயர்கிறது. ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.

முன்னாள் பா.ஜ.க நிர்வாகியான ஆளுநர், தற்போதைய அதிகார அமைப்பின் அழுத்தத்தில் இருக்கிறார். விஜய்யை முதலமைச்சராக்கக் கூடாது என்பதுதான் டெல்லியின் மற்றும் பா.ஜ.கவின் மனநிலை என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். டெல்லி விஜய்யை முதலமைச்சராகப் பார்க்க விரும்பவில்லை. இதனால்தான் ஆளுநர் முடிவெடுக்கத் தாமதிக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். ஆளுநர் நல்ல மனிதராக இருந்தாலும், அவர் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்.

மாணிக்கம் தாக்கூர் எம்.பி
மாணிக்கம் தாக்கூர் எம்.பி

தமிழகத்தில் பா.ஜ.க-விற்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டுமே உள்ளார், ஆனால் அந்த ஒருவரை வைத்துக் கொண்டும் அவர்கள் அரசியல் செய்யத் தயாராக இருக்கிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மாற்றத்திற்காகவும் நம்பிக்கைக்காகவும் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த ஒரு அரசாங்கத்தைத் தடுப்பது ஒரு குற்றமாகும்.

விஜய் அவர்களை விரைவில் ஆட்சியமைக்க அழைத்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க (floor test) வாய்ப்பளிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அதுவே இயற்கை நீதி. இந்த மாற்றத்திற்கும் நம்பிக்கையிக்கும் எதிராக எந்தக் கட்சி தடையாக இருந்தாலும், அவர்களைத் தமிழக மக்கள் தண்டிப்பார்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *