இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் – Kumudam

Spread the love

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாளை (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று மழை நிலவரம்:

இன்று (ஆகஸ்ட் 17) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் ஒருசில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை கனமழைக்கு வாய்ப்பு:

நாளை (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் ஒருசில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த நாட்களில் மழை எப்படி இருக்கும்?

ஆகஸ்ட் 19-ம் தேதி நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 20-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்யலாம்.

ஆகஸ்ட் 21 முதல் 23-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் ஏனைய பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை எப்படி இருக்கும்?

ஆகஸ்ட் 17 முதல் 21-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. எனினும் வட உள் தமிழகத்தில் வெப்பநிலை சற்று உயரக்கூடும்.

வட உள் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகலாம். மற்ற பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.

சென்னையில் வானிலை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

ஆகஸ்ட் 17 முதல் 21-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இடையிடையே மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளது.

இதனால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *