அதிமுகவின் நிர்வாகப் பலம் குறையும்
மற்றொரு புறம், தொகுதி மேம்பாட்டிற்காகவே ஆளுங்கட்சியில் இணைந்ததாக, அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூறினாலும், முதலமைச்சர் என்பவர் ஒட்டுமொத்த மாநிலத்திற்குமானவர் மற்றும் திட்டங்கள் அனைத்துத் தொகுதிகளுக்கும் பொதுவானவை என்பதை கடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்றபோது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனவே, இந்தக் கட்சித் தாவல்கள் மக்கள் நலனுக்கானவை அல்லாமல், அரசியல் ஆதாயம், பணப் பேரங்கள் மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற சுயநல நோக்கங்களுக்காகவே நிகழ்ந்துள்ளன.
எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தொடர் தோல்விகளைச் சந்திப்பதால் மாற்றுப் புகலிடம் தேடி அவர்கள் சென்றுள்ளனர். இதனால் அதிமுகவின் நிர்வாகப் பலம் வரும் நாட்களில் மேலும் குறையக்கூடும்.

திமுக மற்றும் அதிமுகவின் பிரசார உத்தி
இருப்பினும், கட்சி மாறிய சட்டமன்ற உறுப்பினர்களைத் ‘துரோகிகள்’ என்றும், ‘பணத்திற்காக விலைபோனவர்கள்’ என்றும், தேவையின்றி இடைத்தேர்தலைத் திணித்தவர்கள் என்றும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கடுமையாக விமர்சிக்கும் என்பதால், கடந்த காலங்களில் தவெக வேட்பாளர்களுக்குக் கிடைத்த அரசியல் சலுகைகளும் பொதுமக்களின் பரிதாப அலையும் இனி கிடைக்காது.
ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசி, அதைச் சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் விஜய்யின் சுருக்கமான பிரசார உத்தியை, இனி திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளும் சம பலத்துடன் கையாளத் தொடங்கும்.