இடைத்தேர்தல்: "இடதுசாரிகள் தனித்துப்போட்டி என முன்பே சொல்லியிருந்தால்…" – சீமானின் திட்டம் என்ன?

Spread the love

சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் அவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “சென்னையில் எங்கு தலைமைச் செயலகம் கட்டினாலும் போக்குவரத்து மற்றும் மக்கள் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். அப்படி இருக்கையில், 5,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திப் புதிய தலைமைச் செயலகம் கட்டியே தீருவோம் என்று அலைவது ஏன் என்று தெரியவில்லை.

மேகமலைப் பகுதி மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் குறித்து சட்டமன்றத்தில் குரல் எழுப்பப்படுவதில்லை. மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயரங்களோ, பட்டினப்பாக்கத்தில் 12 தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மீனவ மக்களை வாழ்விடங்களை விட்டு வெளியேற்றக் கூடாது என்ற கோரிக்கைகளோ அரசாங்கத்தின் கவனத்தைப் பெறுவதில்லை.

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை

மாறாக, திரைப்பட விளம்பரப் பேனர்கள் மற்றும் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்ட சம்பவங்களே இங்குப் பெரிய பிரச்னையாகப் பேசப்படுகின்றன. புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பான அறிவிப்புகள் மற்றும் அரசாணைகள் வெறும் காகித அளவிலான அறிவிப்புகள்தான்; நடைமுறையில் அது நடக்கப் போவதும் இல்லை, கட்ட விடப் போவதும் இல்லை.

ஐயா ஜி.கே.வாசன் போன்ற தலைவர்கள், `அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் தேவை என்று ஆய்வு செய்துதான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது’ எனக் கூறுகிறார்கள்.

புதிய தலைமைச் செயலகம் வேண்டும் என்று சொல்பவர்களிடம், `ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் தலைமைச் செயலகத்தில் என்ன குறை உள்ளது?’ என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. ஒருவேளை கூடுதல் வசதிகள் தேவை என்றால் கூட, புதிய கட்டிடத்திற்கு ரூ.1,200 கோடி ஒதுக்குவது வீண் விரயமாகும். முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் ஆட்சிக் காலத்தில் ரூ.600 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகத்திற்காகவே ஒரு கட்டிடம் கட்டப்பட்டது.

ஆட்சி மாற்றத்திற்குப் பின் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் அக்கட்டிடம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அன்றைக்குக் கட்டப்பட்ட நோக்கத்தின்படியே அதைத் தலைமைச் செயலகமாகத் திறக்க வேண்டும் என்று போராடாமல் அமைதி காத்தவர்கள், இன்று நவீன வசதிகளுக்காகப் புதிய கட்டிடம் வேண்டும் எனக் கூறுவது முரண்பாடாக உள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஏற்கனவே சென்னை நகரம் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும்போது, மக்களின் வாழ்விடங்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டிடங்களை அமைப்பதில் எந்த நியாயமும் இல்லை. ஏற்கனவே இருக்கும் ஓமந்தூரார் வளாக கட்டிடத்தையே தேவையான மாற்றங்களுடன் நவீனப்படுத்தி தலைமைச் செயலகமாகப் பயன்படுத்த முடியும். அதை விடுத்து, ரூ.13.5 லட்சம் கோடி கடன் சுமையில் இருக்கும் சூழலில், மீண்டும் கடன் வாங்கி மக்கள் பணத்தை வீணடிப்பது ஏற்புடையதல்ல.

நாட்டின் உண்மையான பிரச்னைகளான மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, எளிய மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்கள் ஆகியவை விவாதிக்கப்பட வேண்டும். மக்கள் பணத்தில் வீண் திட்டங்களைச் செயல்படுத்துவதையும், பதவிக்காக கட்சி மாறி இடைத்தேர்தல்களைத் திணித்து மக்கள் நிதியை வீணடிப்பதையும் தவிர்க்க வேண்டும். அடிப்படை அரசியல் மற்றும் நிர்வாக மாற்றங்களின் மூலமே மக்களுக்கான உண்மையான நன்மைகளைச் செய்ய முடியும்.

அரசியல் தெரிந்தவர்களிடம் அரசியல் பேசலாம். அவதூறு பரப்புபவர்களிடம் பேச ஒன்றுமில்லை. விஜய் சேதுபதி பகிர்ந்த கருத்து ஒரு பொதுவான தலைமைத்துவக் கோட்பாடு மட்டுமே.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

இறையன்பு ஐயா போன்றவர்கள் எழுதிய புத்தகங்களில் ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதைத்தான் அவர் பதிவு செய்துள்ளார். அதைத் தனிப்பட்ட முறையில் தன்மீதான தாக்குதலாக எடுத்துக்கொண்டு பிரச்னை செய்வது அவசியமற்றது. இதுபோன்ற தேவையற்ற கருத்து மோதல்களில் கவனம் செலுத்துவதில் பயனில்லை. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பல லட்சம் கோடி முதலீடுகள் வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இங்குள்ள சிவநாடார், மார்ட்டின் போன்ற தமிழ்நாட்டுத் தேசிய இன முதலாளிகளாலேயே ரூ.10,000 முதல் ரூ.15,000 கோடி வரை முதலீடு செய்ய முடியும். உள்நாட்டு முதலாளிகளை ஊக்கப்படுத்தித் தொழில்களைத் தொடங்குவதே சரியான அணுகுமுறையாகும். அதைவிட்டுவிட்டு வெளிநாட்டு முதலீடுகளை மட்டுமே நம்பியிருப்பது தீர்வாகாது.

இன்று மின்சாரக் கட்டணமும் சொத்து வரியும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதால் அடித்தட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.1,000 மின் கட்டணம் செலுத்தியவர்கள் இன்று ரூ.3,000 செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தாம்பரம் மாநகராட்சியில் ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பந்தம் போட்டு ரூ.46 லட்சம் வரை ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

ஊழலற்ற ஆட்சி தருவதாகக் கூறும் முதல்வர் இதற்கெல்லாம் பதில் கூற வேண்டும். இடதுசாரிகள் தனித்துப் போட்டியிட எடுத்த முடிவை நான் பெரிதும் பாராட்டி வரவேற்கிறேன். ஆனால், இந்த முடிவை அவர்கள் இன்னும் முன்பே எடுத்திருக்க வேண்டும்.

சீமான்
சீமான்

தமிழ்நாட்டின் தீய ஆட்சி முறைகளுக்கு அவர்கள் இவ்வளவு காலம் துணையாக இருந்தது வருந்தத்தக்கது. புரட்சிகரமான மற்றும் சோசலிச சிந்தனைகளை எங்களுக்கு விதைத்ததே கம்யூனிச இயக்கங்கள்தான். அவர்கள் முன்கூட்டியே அறிவித்திருந்தால், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நிறுத்தாமல் அவர்களை ஆதரித்திருப்போம்.
அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியில் சேர்ந்து மீண்டும் அதே எம்.எல்.ஏ பதவிக்குப் போட்டியிடுவது மக்கள் பணத்தை வீணடிக்கும் செயலாகும்.

ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த ரூ.50 கோடி வரை மக்கள் பணம் வீணாகிறது. “ஆளுங்கட்சியில் இருந்தால்தான் தொகுதிக்குச் சேவை செய்ய முடியும்” என்ற தவறான கருத்தைப் பரப்புவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் அல்லது இடைத்தேர்தல் செலவான ரூ.50 கோடியைச் சம்பந்தப்பட்டவர்களே ஏற்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *