கோவை செரையம்பாளையம் பகுதியில் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவையை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மீண்டும் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “பிக்பாஸ் ஒரு கேளிக்கை நிகழ்ச்சி. நடிகர் விஜய் சேதுபதி இரண்டு வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார் என எனக்கு தெரியும். மகாராஜா திரைப்படம் நடிப்பதற்கு அவருடைய நிலை எவ்வாறு இருக்கும் என்பதை அவரது கட்டத்தைப் பார்த்து நான் கூறி இருந்தேன்.
அப்போது அவருக்கு ஜாக்பாட் அடிக்க போகிறது என்று கூறி இருந்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு ஜாக்பாட் ஆக இருந்தது. இந்த நூறு நாளில் சுமார் 80 கோடி வரை அவர் சம்பளம் வாங்குவார். எனவே சம்பளத்திற்காக அவர் பேசியிருக்கிறார்.

அந்தத் தொலைக்காட்சியிடம் கேட்டபோது முதல்வரைக் குறிப்பிட்டு நாங்கள் பேசவில்லை என்று விளக்கம் கூறுகிறார்கள். ஆனால் ஓபன் ஆக சொல்ல வேண்டும் என்றால் அது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலத்தான் என்று விமர்சித்தார். எங்களைப் பொறுத்தவரை அரசியல் விமர்சனம் யார் வேண்டுமானால் வைக்கலாம். ஆனால் பார்த்து பேச வேண்டும்.
அவர் பேசுவதால் இங்கு எந்த ஒரு விஷயமும் மாறப் போவது கிடையாது. எங்களுடைய அரசாங்கம் வெளிப்படையாக என்னென்ன நடக்கின்றன. அவர் என்ன செய்கிறார், எங்கு செல்கிறார், என்ன சாப்பிடுகிறார் என்பது முதல் கொண்டு வெளிப்படையாகக் கூறுகிறோம்.

விஜய் சேதுபதிக்கு ஜாக்பாட் என்பது கண்டிப்பாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அவர் குறிப்பிட்ட கட்சியினரிடம் இருந்து காசு வாங்கிக்கொண்டு பேசுகிறார். எங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டு அவரைப் பேச சொல்லுங்கள், அதற்கு நாங்கள் பதில் கூறுகிறோம், மக்கள் பதில் கூறுவார்கள். என்னைப் பொருத்தவரை இதை இன்னைக்குப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் அவருடைய பிழைப்பிற்காகச் செய்கிறார்.
சட்டசபை நடந்தபோது யாரும் நாடகம் கூட பார்க்கவில்லை. குழந்தைகள் முதல் கொண்ட அனைவரும் சட்டசபையைப் பார்க்கிறார்கள். விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை, இதோடு விட்டால் நன்றாக இருக்கும். எங்களுடைய ஆட்சியைத் தற்போது கண்கூட மக்கள் பார்த்து விட்டார்கள். மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வந்துவிட்டது. எனவே இடைத்தேர்தலில் எங்கள் தலைவர் யாரை நிற்க வைக்கிறாரோ, அவர்தான் வெற்றியாளர்” எனத் தெரிவித்தார்