இடைத் தேர்தல்; `இடதுசாரிகள் தனித்துப் போட்டி' – திருமாவளவன் ரியாக்‌ஷன் என்ன?

Spread the love

சிவகாசியில் நேற்று வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார், அப்போது, “தென்கொரிய நிறுவனத்துடன் கடந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து, தலைமுறை தலைமுறையாக அப்பணியில் ஈடுபட்டு வரும் ஏறத்தாழ 50,000 உப்பளத் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் ஒப்புதல் மற்றும் இசைவு இல்லாமல் இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது.

உப்பளத் தொழிலாளர்கள்

மக்களின் போராட்டத்தையும் உணர்வுகளையும் மதித்து, உப்பளத் தொழிலையும் தொழிலாளர்களையும் தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை அமைச்சர் கீர்த்தனா உட்பட அமைச்சர்களோ அதிகாரிகளோ சந்திக்க மறுப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து நேரடியாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் கவனத்திற்கு விசிக கொண்டு செல்லும்.

ஆட்சி தொடர மட்டுமே ஆதரவு என்ற அவர்களின் நிலைப்பாட்டின்படி தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகளான சிபிஐ, சிபிஎம் தனித்துப் போட்டியிடுவது அவர்களின் உரிமை. அதேவேளையில், விசிக அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி இவ்விரு தொகுதிகளிலும் கூட்டணி வெற்றிபெற முழு ஒத்துழைப்பு நல்கும். தி.மு.க எம்.பி ஆ.ராசா அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரை மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

ஆ.ராசா
ஆ.ராசா

தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், ‘யார் மனதையும் காயப்படுத்தும் வகையில் கட்சியினர் பேச மாட்டார்கள்’ எனக் கூறியிருந்த நிலையில், முதலமைச்சரையே ஒருமையில் பேசுவதும், பிறப்பு குறித்து கேள்வி எழுப்புவதும் பெரியார் பாசறையில் வளர்ந்தவர்களின் பேச்சாக இல்லை. இந்த நடவடிக்கை தி.மு.க-வின் நன்மதிப்பையே சீர்குலைக்கும் என சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *